தந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள்! சூட்கேசில் துண்டு துண்டாக உடல்!
காதல் எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு உதாரணமாக தந்தையை தத்தெடுத்த மகளே, தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொன்றது அம்பலத்திற்கு வந்துள்ளது.
மும்பை மாகிம் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம சூட்கேஸ் ஒன்று மிதந்துக் கொண்டிருந்தது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார், அந்த சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தனர். அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், ஒரு ஆணின் கால்கள், மார்பு பகுதி மற்றும் மர்ம உறுப்பு உள்ளிட்ட பாகங்கள் இருந்தன. உடலின் பாகங்கள் தவிர, 2 சட்டைகள், ஒரு கம்பளி ஆடை மற்றும் பேன்ட் உள்ளிட்டவையும் சூட்கேஸில் இருந்தன. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளியை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர்.
ஆரம்பத்தில் கொலையாளியை நெருங்குவதில் சவாலான இந்த வழக்கில், சூட்கேசில் இருந்த சட்டைகளில் தையல் கடையின் பெயர் மற்றும் முகவரி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த தையல் கடைக்கு சென்று விசாரி்த்தனர். அப்போது அந்த சட்டையின் சொந்தகாரரின் பெயர் பென்னட் என்ற தகவல் மட்டும் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த சட்டை மற்றும் பென்னட் என்ற பெயரை மட்டும் வைத்து கொலை செய்யப்பட்டவரை சமூக வலைதளங்களிலும், தையல் கடை அமைந்துள்ள பகுதியிலும் தேடி வந்தார்கள். அப்போது முகநூல் மூலமாக போலீசார், பென்னட் ரெய்பெல்லோ என்ற பெயரில் ஒருவர் சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியில் வசித்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது, பென்னட் ரெய்பெல்லோவின் வீடு பூட்டி இருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது, பென்னட் ரெய்பெல்லோ (வயது59), வளர்ப்பு மகளான ஆராதியா என்ற ரியாவுடன் (19) வசித்து வருவதாக கூறினார்கள். இதையடுத்து போலீசார் ரியாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
முதலில் அவர் வளர்ப்பு தந்தை கனடாவில் இருப்பதாக கூறினார். பின்னர் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், வளர்ப்பு மகள் ரியா தான், தன்னுடைய 16 வயது காதலனுடன் சேர்ந்து வளர்ப்பு தந்தையை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து நடந்த விசாரணையில், பென்னட் ரெய்பெல்லோ வளர்ப்பு மகள் ரியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த மாதம் 26-ந் தேதி தனது காதலனுடன் சேர்ந்து தந்தையை கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தார். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல், தந்தையின் உடலை 3 நாட்களாக வீட்டிலேயே வைத்திருந்து இருக்கிறார். பின்னர் தனது காதலனுடன் சேர்ந்து தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேசில் போட்டு வீசியிருக்கிறார். சூட்கேஸ் மாகிம் கடற்கரையில் ஒதுங்கிய போது சிக்கியிருக்கிறார்.
இதையடுத்து போலீசார் ரியா மற்றும் அவரது காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தையை காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in