மெரினா கடற்கரை தூய்மைப்பணி: மாநகராட்சிக்கு கெடு - சென்னை உயர் நீதிமன்றம்
மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ளும் திட்டம் வகுக்க டிசம்பர் 17ம் தேதி வரை மாநகராட்சிக்கு கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசின் அனுமதி பெற்ற பிறகு தான் ஆழ்கடலில் மீன்பிடிக்க வேண்டும் என்பதை மாற்றியமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், மெரினா கடற்கரை பராமரிப்பு குறித்து சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.
மெரினா கடற்கரையில் லைட் ஹவுஸ் அருகில் சாலைகளை ஆக்ரமித்து மீன்கடைகள் இயங்கி வருவது குறித்து, மீனவர்களுக்கு மார்கெட் அமைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுக்க டிசம்பர் 17ம் தேதி வரை மாநகராட்சிக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கு முடியும் வரை சென்னை மாநகராட்சி ஆணையர் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டனர்.
newstm.in
newstm.in