1. Home
  2. தமிழ்நாடு

`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா' கெஞ்சிய இளைஞர்! கைவிட்ட108?!

`மூச்சு முட்டுது, சீக்கிரம் வாங்கண்ணா' கெஞ்சிய இளைஞர்! கைவிட்ட108?!

காஞ்சிபுரம் கீரை மண்டபம் பகுதியில் வசிக்கும் நடராஜ் என்பவரின் மகன் கணேஷ்குமார். கல்லூரி மாணவரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பச்சையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நிகழ்விடத்திற்கு வந்து கதறியழுதனர். பின்னர் கணேஷ்குமாரின் இறுதிச்சடங்கு முடிந்தநிலையில், பெற்றோர்கள் அவரின் செல்போன் பதிவுகளைப் பார்த்தனர். கணேஷ் கடைசியாக யாரையெல்லாம் அழைத்துப் பேசி இருக்கிறார் என அழைப்பு விவரங்களைப் பார்த்தபோது 108க்கு போன் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்போனில் உள்ள கால் ரெக்கார்டை கேட்டிருக்கிறார்கள். அப்போது, உயிருக்குப் போராடும் நிலையில் கணேஷ் குமார் பதற்றத்துடன் பேசும் ஆடியோவைக் கேட்டு அதிர்ந்துள்ளனர்.
அந்த ஆடியோவில்,
மாணவர் - ``நான் பச்சையப்பன் ஸ்கூல் கிட்ட இருக்கிறேண்ணா. மூச்சு முட்டுது கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா."

108 ஆம்புலன்ஸ் ஊழியர் - ``பக்கத்தில் இருக்கிறவங்க யாரிடமாவது கொடுங்க.."

மாணவர் - ``யாருமே இல்லைண்ணா... கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா. முடியலண்ணா."

108 ஆம்புலன்ஸ் ஊழியர் - ``சீக்கிரம்னா எங்கிருந்து வருவது.? நீங்க எங்க இருக்கீங்கன்னு தெளிவா சொல்லுங்க. பயப்படாதீங்க. பக்கத்துல இருக்கறவங்க கிட்ட கொடுங்க.. பக்கத்துல யாருமே இருக்கமாட்டாங்களா?"

மாணவர் - ``யாருமே இல்லைண்ணா." "பச்சையப்பாஸ் ஸ்கூல். மூங்கில் மண்டபம்ணா.."

108 ஆம்புலன்ஸ் ஊழியர் - "எங்கிருக்கிறது?"

மாணவர் - "காஞ்சிபுரம்ணா. கொஞ்சம் சீக்கிரம் வாங்கண்ணா."

108 ஆம்புலன்ஸ் ஊழியர் - "பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட கொடுங்க"

மாணவர் - "யாருமே இல்லைண்ணா."

108 ஆம்புலன்ஸ் ஊழியர் - "நீங்கதான் பக்கத்தில் யாராவது இருக்காங்கன்னு பார்க்கனும். டக்குன்னு நடந்துபோய் யாரையாவது கால்பண்ணச் சொல்லுங்க."

இப்படியாக சுமார் 16 நிமிடம் மாணவருக்கும், 108 ஆம்புலன்ஸ் ஊழியருக்குமான உரையாடல் முடிகிறது.

இந்நிலையில், கணேஷுக்கு சுவாசக் கோளாறு ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அதற்குச் சிகிச்சை எடுத்து வந்தான். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று பிரச்னை ஏற்பட்டபோது, அவனே 108க்கு அவனே போன் செய்து மருத்துவமனைக்குத் தனியாகச் சென்று சிகிச்சை எடுத்திருக்கிறான் என அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். தற்போது விளையாட சென்றபோது இப்படி நிகழ்ந்துவிட்டதாக கூறுகின்றனர். தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த நிலையில் 108 நிர்வாகத்தினர் அலட்சியமாக நடந்துகொண்டதால், நாங்கள் எங்கள் மகனை இழந்துவிட்டோம். இனி யாருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது எனவும் அவரது பெற்றோர் கண்ணீருடன் கூறினர்.

இது தொடர்பாக பேசிய காஞ்சிபுரம் மாவட்ட `அவசர எண் 108' மாவட்ட மேலாண்மை அலுவலர் செல்வமணி, ``கால் சென்டரில் இருப்பவர்களுக்குச் சரியான இடம் தெரியப்படுத்த முடியாததால், இதுபோன்று சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். பிளே ஸ்டோரில் `அவசரம் 108' செயலியைப் பதிவிறக்கம் செய்திருந்தால் ஆபத்தில் உள்ளவர்கள் இருப்பிடத்தை அவர்கள் சொல்லாமலேயே தெரிந்து கொள்ளமுடியும். இதற்கான விழிப்புணர்வை நாங்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்." என்கிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like