காதலன் கொலை.. இன்னொரு காதலன் வாக்குமூலம்.. ஆனால் காதலியை காணவில்லை..
திருவண்ணாமலை அருகே பெண் ஒருவர் இளைஞருடன் சேர்ந்து 8 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலனை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஏரியில் கடந்த 18ஆம் தேதி ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவருடைய சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் சுரேஷ் (38) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட சுரேஷின் அண்ணன் பாலு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சுரேஷ் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும், அவருடைய உறவினர்கள் யாராவது தன் தம்பியைக் கொலை செய்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சுரேஷைக் கொலை செய்ததாகக் கூறி அஜித்குமார் (21) என்பவர் ஆரணி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீசாரிடம் சரணடைந்துள்ளார். பின்னர் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுரேஷ் காதலித்து வந்த கிருஷ்ணவேணி தனக்கும் பழக்கமானவர் என்றார். சுரேஷ் திருமணம் செய்துகொள்ளும்படி தொந்தரவு செய்துவந்ததால் அவரை கொலை செய்ய கிருஷ்ணவேணி திட்டம்போட்டு தன்னிடம் கூறினார். அதற்கு நான் ஒப்புக்கொண்டதையடுத்து சம்பவத்தன்று கிருஷ்ணவேணி சுரேஷை ஏரிக்கு வரவழைத்தார். அங்கு தான் அவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாகவும் அஜித்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்துள்ள போலீசார் கிருஷ்ணவேணியைத் தேடி வருகின்றனர்.
newstm.in