4 மாத குழந்தையுடன் அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல்! தமிழகத்தில் பரபரப்பு!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி. திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் இவர், பூங்கொடி என்ற மனைவி, நிஷாந்த் என்ற நான்கு மாத குழந்தை என குடும்பத்துடன் வசித்து வருகிறார். பூங்கொடி உள்ளாட்சி தேர்தலில் திருத்தணி ஒன்றியம் 2-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தார். திருத்தணி ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கவுன்சிலர் பூங்கொடி அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோர் கடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பூங்கொடியின் கணவர் கோட்டி, கடந்த 10ம் தேதி திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், மாயமான பூங்கொடி உள்பட 3 பேரும் இன்னும் மீட்கப்படவில்லை. இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடத்தப்பட்ட மனைவி பூங்கொடி, மகன் நிஷாந்த், மாமியார் வசந்தி ஆகியோரை மீட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 9ம் தேதி திருத்தணி பைபாஸ் சாலையில் வசிக்கும் ஜோதி நாயுடு என்பவர், நான் அழைத்து வரச் சொன்னதாக கூறி மனைவி பூங்கொடி, மாமியார் வசந்தி ஆகியோரை கைக்குழந்தை நிஷாந்துடன் கடத்தி சென்று விட்டார். இதுபற்றி ஜோதி நாயுடுவிடம் கேட்ட போது என்னை மிரட்டினார். எனது மனைவி உள்பட 3 பேரையும் திருப்பதி திருச்சானூரில் மிரட்டி. கடத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை மீட்டு தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குடும்பத்தோடு அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்டுள்ள விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in