மாணவிகளின் ஹாஸ்டலுக்குள் 7 அடி நீள நாகப்பாம்பு! அலட்சியப்படுத்தும் நிர்வாகம்!
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் கல்லூரியின் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவிகளில் 90% பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் சில மாணவிகளே விடுதியில் உள்ளனர். அப்போது விடுதிக்குள் சுமார் 7அடி நீளமான நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது.
இதனை கண்ட மாணவிகள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து வெளியே ஓடினர். மாணவிகளின் விடுதிக்குள் பாம்பு புகுந்தது குறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சிறிது நேர போராட்டத்திற்கு பின் பாம்பை பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுச் சென்று விட்டனர். இதனையடுத்து விடுதியில் இருந்த மாணவிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மாணவிகளின் விடுதி அறைகளைச் சுற்றிலும் புதர் போன்ற பகுதிகள் இருப்பதாகவும், மாலை நேரங்களிலேயே மாணவிகள் தனியே அந்த பகுதிகளில் நடமாட அஞ்சுவதாகவும் ஏற்கெனவே பலமுறை புகார் அளித்தும், நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த செய்தி இப்போது தான் வெளியில் வந்திருப்பதாகவும், மாதத்தில் ஒரு முறையாவது இப்படி இந்த பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் இருக்கும் எனவும், பெரும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுவதற்கு முன்பாக நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in