பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக மட்டும் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டப் பெண்ணை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எரித்துக் கொலை செய்தனர். மேலும் ஒரு சிறுமியை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்து குடும்பத்தினருக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் என பல பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக மாநில அளவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக மட்டும் மாநிலம் முழுவதும் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
newstm.in