கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு சிறை?
ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் போர்ச்சுகல் நாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது நடந்து வரும் வரி ஏய்ப்பு வழக்கில் அவர் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகளிடம் ஒப்பந்தத்துக்கு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஸ்பெயின் நாட்டின் அரசை ஏமாற்றி, சுமார் 118 கோடி ரூபாய் அளவில் வெளிநாட்டு லெட்டர் பேடு கம்பெனிகள் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக ரொனால்டோ மீது அந்நாட்டு அரசு வழக்கு தொடுத்தது. இதுவரை தான் எந்த குற்றமும் செய்யவில்லை என கூறிவந்தார் ரொனால்டோ.
தனது அணியில் விளையாடிய முன்னாள் வீரர் ஜாபி அலோன்சோவுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை கோரியுள்ளது ஸ்பெயின் அரசு. இந்நிலையில், அதுபோல தனக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள ரொனால்டோ விருப்பம் தெரிவித்துள்ளார். வரி ஏய்ப்பு மற்றும் அபராதம் என எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கட்டத் தயார், என ஸ்பெயின் அரசு வழக்கறிஞர்களிடம் ரொனால்டோ தரப்பு கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால், தான் வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புக்கொள்ள முடியாது என்று ரொனால்டோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம் தனக்கு வரவேண்டிய பணத்தை பெற்றதாக ஒப்புக்கொண்டாலும், ஸ்பெயின் நாட்டில் வரி ஏய்ப்பு செய்யவேண்டும் என தான் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
newstm.in