உலகக் கோப்பையை மெஸ்ஸி வெல்ல வேண்டும்: கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி, நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பையை, லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரராக இருந்தாலும் இந்தியாவில் கால்பந்து தொடர்பான பல நடவடிக்கைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருபவர் கங்குலி. அட்லெடிகோ டி கொல்கத்தா அணியின் துணை நிறுவனரான அவர் வரவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பையை பற்றி பேசினார். அப்போது அவர், அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பையை வெல்வதை பார்க்க வேண்டும் என்றார்.
எப்போதுமே பிரேசில் வெல்ல வேண்டும் என விரும்பும் கங்குலி, மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையாக இது இருக்கலாம், என்ற காரணத்தால், இதில் அவர் வெல்ல வேண்டும் என்றுள்ளார். "மெஸ்ஸியின் மேஜிக்கை பார்க்க ஆர்வமாக உள்ளேன். அவர் இன்னும் ஒரு உலகக் கோப்பையை கூட வெல்லவில்லை. அதனால் இது அவருக்கு மிகப்பெரிய உலகக் கோப்பையாகும். நான் பிரேசில் அணியின் ஆதரவாளன் தான். ஆனால், மெஸ்ஸியின் தீவிர ரசிகன்" என்றார் கங்குலி. உலகக் கோப்பையின் முக்கிய போட்டிகளை நேரில் காண, ரஷ்யா செல்லவுள்ளார் கங்குலி.
பலரால் கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, 2014 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்று ஜெர்மனியிடம் தோல்வியை தழுவினார். ஆனால், 2014 உலக கோப்பையின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 31வது வயதில் இருக்கும் அவர், அடுத்த உலகக் கோப்பையின் போது, சிறப்பாக விளையாட முடியுமா என்ற சந்தேகம் உள்ளதால், இது அவருக்கு கடைசி உலக கோப்பையாகவே பார்க்கப்படுகிறது. இரண்டு முறை கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதி போட்டியிலும் மெஸ்ஸி தோற்றுள்ள நிலையில், தேசிய அணிக்காக முதல் பெரிய கோப்பையை வெல்வார் என்ற ஆர்வத்துடன் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
newstm.in