1. Home
  2. விளையாட்டு

எதிரணி ரசிகர்களையே மெய்சிலிர்க்க வைத்த மெஸ்ஸி!


ஸ்பெயின் கால்பந்து லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, அடித்த ஹேட்ரிக் கோல்களை பார்த்து எதிரணி ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள், தங்களது அணி மோசமாக தோல்வியடையும்போது அதிர்ச்சியில் உறைவதும், கோபத்தை வெளிப்படுத்துவதும் வாடிக்கை. ஆனால், அவ்வப்போது எதிரணியின் ஆட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்து போய் கைதட்டும் சம்பவங்களும் அரங்கேறுவதை நாம் பார்த்திருக்கிறோம். மற்ற விளையாட்டுக்களை விட, வெறி கொண்ட கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிக மிக அரிது. அதையும் மீறி நேற்று நட்சத்திர வீரர் மெஸ்ஸி, எதிரணி ரசிகர்களை வாய்பிளக்க வைத்ததை உலகம் பார்த்தது.

கால்பந்து வரலாற்றிலேயே மிகச் சிறந்த வீரராக, பீலே மாரடோனா ஆகிய ஜாம்பவான்களுக்கு இணையாக பார்க்கப்படுபவர் லியோனல் மெஸ்ஸி. பார்சிலோனா அணிக்காக விளையாடும் அவர், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், எதிரணியின் மைதானத்தில் வைத்து ஹேட்ரிக் கோல்கள் அடித்தார். எதிரணியான ரியல் பெட்டிஸ், துவக்கத்தில் சிறப்பாக விளையாடி பார்சிலோனாவை ஆட்டம் காண வைத்தது. அப்போது 18வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு சூப்பர் ப்ரீ கிக் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். முதல் பாதி முடியும் நேரத்தில், மெஸ்ஸி மற்றொரு அசத்தலான கோல் அடித்தார்.

அதன் பின்னர் 85வது நிமிடத்தின் போது, ஆட்டம் முடியும் நேரத்தில், சுமார் 30 அடி தூரத்தில் இருந்து பந்தை சிப் செய்து மற்றொரு அட்டகாசமான கோல் அடித்தார். இந்த கோலை பார்த்த எதிரணி ரசிகர்கள் ஆச்சர்யத்தில் முதலில் வாய் பிளந்தனர். பின்னர், எழுந்து நின்று கைதட்டி மெஸ்ஸிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான எதிரணி ரசிகர்கள் கைதட்டி பாராட்டியது, தன்னை நெகிழ வைத்ததாக மெஸ்ஸி பின்னர் கூறினார்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like