1. Home
  2. விளையாட்டு

செல்சி-க்கு ஷாக் கொடுத்த மெஸ்ஸி; பார்சிலோனா முன்னிலை

செல்சி-க்கு ஷாக் கொடுத்த மெஸ்ஸி; பார்சிலோனா முன்னிலை


பார்சிலோனா செல்சி அணிகளுக்கு இடையே நேற்று இரவு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், பார்சிலோனா 1-1 என டிரா செய்தது.

இரண்டு போட்டிகளாக நடைபெறும் ரவுண்ட் ஆப் 16 சுற்றின் முதல் போட்டி, லண்டனில் உள்ள செல்சியின் ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது. இரு பலம்வாய்ந்த அணிகள் மோதுவதால், இந்த போட்டியை கால்பந்து உலகமே உற்று கவனித்தது. முதல் பாதியில் பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. 30 நிமிடங்கள் வரை பார்சிலோனா அதிரடியாக விளையாடினாலும், ஒரு சில வாய்ப்புகளை மட்டுமே உருவாக்க முடிந்தது. ஆனால், கோல் அடிக்க முடியவில்லை.

ஆனால், சிறப்பாக விளையாடிய செல்சி அணியின் வீரர் வில்லியன் அடித்த இரண்டு ஷாட்கள், கோல் போஸ்ட்டில் பட்டு வெளியேறியது. இரண்டவது பாதியில் செல்சி அணி சிறப்பாக விளையாட துவங்கியது. 62வது நிமிடத்தில், செல்சி அணியின் வில்லியன், சுமார் 30 அடி தூரத்தில் இருந்து சூப்பர் ஷாட் ஒன்றை அடித்தார். இந்தமுறை கோல் போஸ்டில் படாமல் அது உள்ளே நுழைந்தது. செல்சி அணி 1-0 என முன்னிலை பெற்றது.

அதன்பிறகு பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தியது. 75வது நிமிடத்தின் போது, செல்சி அணி செய்த ஒரு தவறை பயன்படுத்தி, இனியெஸ்டா பாஸ் செய்ய அதை மெஸ்ஸி கோலக்கினார். இதனால் பார்சிலோனா 1-1 என போட்டியை சமன் செய்தது. செல்சி அணிக்கு எதிராக மெஸ்ஸி அடிக்கும் முதல் கோல் இதுவாகும். இதுவரை 9 போட்டிகளில் அந்த அணியுடன் மோதியுள்ள மெஸ்ஸிக்கு, அவர்களுக்கு எதிராக கோல் அடிப்பது எட்டாக்கனியாகவே இருந்துது. நேற்று அது உடைந்தது.

இரண்டு போட்டிகளாக நடைபெறுவதால், சாம்பியன்ஸ் கோப்பை விதிப்படி, இரண்டு அணிகளும் சமமான அளவு கோல்கள் அடித்தால், எந்த அணி எதிரணியின் மைதானத்தில் அதிக கோல்கள் அடித்ததோ, அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். தற்போது செல்சியின் மைதானத்தில் கோல் அடித்துள்ளதால், அடுத்த போட்டியில் பார்சிலோனா கோல் எதுவும் இல்லாமல் டிரா செய்தால் போதும்.

நேற்று நடந்த மற்றொரு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பேயர்ன் மூனிச் அணி பெஸிக்டாஸ் அணியை 5-0 என வீழ்த்தியது.

newstm.in

Trending News

Latest News

You May Like