1. Home
  2. விளையாட்டு

மெஸ்ஸி ரொனால்டோவுக்கு கல்தா; ரசிகர்கள் காட்டம்!

மெஸ்ஸி ரொனால்டோவுக்கு கல்தா; ரசிகர்கள் காட்டம்!

சிறந்த கால்பந்து வீரரை கௌரவித்து வழங்கப்படும் பலோன் டி'ஓர் விருதுக்கான வாக்கெடுப்பில், நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ, டாப் 3 இடங்களில் கூட இடம்பிடிக்காத நிலை ஏற்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு ஆண்டு முழுக்க நடைபெறும் க்ளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள சிறந்த வீரருக்காக, பலோன் டி'ஓர் என்ற தங்கப்பந்து விருதை பிரான்ஸ் கால்பந்து கழகம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், சிறந்த கால்பந்து வீரருக்காக ஃபிபா வழங்கும் விருதுடன் பலோன் டி'ஓரும் சேர்த்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் மீண்டும், பலோன் டி'ஓர் விருதை தனித்து வழங்க முடிவெடுக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக, சர்வதேச மற்றும் க்ளப் கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆளுக்கு 5 விருதுகள் என பலோன் டி'ஓரை தங்களுக்குள்ளாகவே மாற்றி மாற்றி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும், இருவரும் அட்டகாசமாக விளையாடி, தங்கள் அணிகள் கோப்பைகளை வெல்ல உறுதுணையாக இருந்துள்ளனர்.

2018ம் ஆண்டில், தற்போது வரை 46 போட்டிகளில் விளையாடியுள்ள லியோனல் மெஸ்ஸி, 42 கோல்கள் அடித்ததோடு, 20 முறை சக வீரர்கள் கோல் அடிக்க அஸிஸிட் கொடுத்து உதவியுள்ளார். அதேநேரம், 43 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, 42 கோல்கள் அடித்தும், 11 முறை சக வீரர்கள் கோலடிக்க உதவியும் உள்ளார்.

வழக்கம் போல, இந்த ஆண்டும் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில், மற்றவர்களை விட கணிசமான முன்னிலை பெற்றிருந்தாலும், இந்த ஆண்டின் பலோன் டி'ஓர் விருது இருவருக்கும் கிடைக்காது போல தெரிகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் க்ளப் அணிகளின் கேப்டன்கள் மற்றும், பயிற்சியாளர்களிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பில், வெல்லும் வீரருக்கு பலோன் டி'ஓர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு, பெரும்பாலானோர், குரேஷிய வீரர் லூக்கா மாட்ரிச்சை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கத்துக்குட்டியான குரேஷிய அணி, 2018 உலகக் கோப்பை இறுதி போட்டி வரை சென்று அசத்தியது. அதன் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் லூக்கா மாட்ரிச், உலகக் கோப்பையின் சிறந்த வீரர், ஐரோப்பிய கண்டத்தின் சிறந்த வீரர், 2018ல் ஃபிபாவின் சிறந்த வீரர், என பல விருதுகளை வென்று அசத்தினார்.

பலோன் டி'ஓர் விருதுக்கான ஓட்டெடுப்பு பாதி அளவு முடிந்துள்ள நிலையில், டாப் 3 வீரர்கள் பட்டியலில், மாட்ரிச் முதலிடத்திலும், உலகக் கோப்பை வென்ற பிரென்ச் அணியின் வீரர்கள் வரானே மற்றும் ம்பாப்பே ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளனர்.

தனித் தனியாக பார்த்தால், மூவரும் மெஸ்ஸி, ரொனால்டோவின் இந்த ஆண்டு சாதனைகளை நெருங்க முடியாத இடத்தில் இருந்தாலும், டாப் 3 பட்டியலில் அவர்களை மிஞ்சியுள்ளது, கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. புதிதாக யாருக்காவது விருதை வழங்க பிரென்ச் கால்பந்து திட்டமிட்டு இவ்வாறு செய்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், சமூக வலைத்தளங்களில், பிரென்ச் கால்பந்து கழகத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like