1. Home
  2. விளையாட்டு

கண்ணீருடன் பார்சிலோனாவில் இருந்து விடைபெற்றார் இனியெஸ்டா!

கண்ணீருடன் பார்சிலோனாவில் இருந்து விடைபெற்றார் இனியெஸ்டா!


சர்வதேச அளவிலும், க்ளப் அளவிலும் அத்தனை கோப்பைகளையும் வென்று சரித்திரம் படைத்த ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா அணிகளில் முக்கிய பங்கு வகித்த ஆண்ட்ரஸ் இனியெஸ்டா, பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

சிறு வயது முதல் பார்சிலோனா க்ளப் அணிக்காக விளையாடி வரும் இனியெஸ்டா, 2009ம் ஆண்டு அந்த அணி விளையாடிய 6 கோப்பைகளையும் வென்று சாதனை படைக்கும் போது, அதன் அச்சாணியாக இருந்தார். 2010ம் ஆண்டு உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி வெல்வதற்கு இனியெஸ்டா அடித்த கடைசி நிமிட கோல் தான் காரணம். ஸ்பெயினுக்காக உலகக் கோப்பை மற்றும் யூரோ கோப்பைகளையும் வென்றுள்ளார்.

பார்சிலோனாவுக்காக 4 ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை, 8 ஸ்பானிஷ் லீக், 6 ஸ்பானிஷ் கப் ஆகிய கோப்பைகளை இனியெஸ்டா வென்றுள்ளார். இந்த தலைமுறையின் மிகசிறந்த வீரராகவும் பார்க்கப்படுகிறார்.

பார்சிலோனாவின் பரம எதிரியான ரியல் மாட்ரிட் ரசிகர்கள் கூட, இனியெஸ்டா வரும் போது எழுந்து நின்று கைதட்டுவார்கள். ரசிகர்கள் வீரர்கள் என எல்லோருக்கும் பிடித்த இனியெஸ்டா, பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 33 வயதான அவர், ஏற்கனவே இந்த ஆண்டோடு, பார்சிலோனாவில் இருந்து விலகி, வேறு அணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இந்த சீசன் மிக சிறப்பாக விளையாடி வரும் இனியெஸ்டா, இனிமேலும் தன்னால், பார்சிலோனாவுக்கு ஏற்றவாறு முழு வேகத்துடன் விளையாட முடியுமா என்ற சந்தேகம் உள்ளதால், அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். தனது சக வீரர்கள் முன்னிலையில், செய்தியாளர்கள் சந்திப்பை அழைத்து கண்ணீருடன் விடைபெற்றார்.

பார்சிலோனாவுக்கு எதிராக விளையாட மாட்டேன் என இனியெஸ்டா கூறியுள்ள நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள எந்த அணியிலும் அவர் சேர மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. சீனா அல்லது அமெரிக்காவில் உள்ள க்ளப் அணிகளில் அவர் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


newstm.in

Trending News

Latest News

You May Like