அர்ஜென்டினா கலரில் வீட்டுக்கு பெயிண்ட் அடித்த இந்திய ரசிகர்!
மேற்கு வங்கத்தை சேர்ந்த டீ விற்கும் கால்பந்து ரசிகர் ஒருவர், அர்ஜென்டினா அணிக்காக தனது ஆதரவை தெரிவிக்க தனது வீட்டிற்கே அந்த அணியின் கலரில் பெயிண்ட் அடித்துள்ளார்.
உலகம் முழுவதும் கால்பந்து உலகக் கோப்பையை பற்றித் தான் பேச்சு. நாளை துவங்கும் போட்டிகளை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் ரஷ்யாவில் குவிந்து வருகின்றனர். ஆனால், எல்லோருக்கும் அந்த கனவு பலிப்பதில்லை. அதனால் தங்களது கால்பந்து பாசத்தை விதவிதமாக காட்டி வருகின்றனர்.
இந்திய ரசிகர்களையும் கால்பந்து மோகம் விட்டுவைக்கவில்லை. மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு ரசிகர் செய்த காரியம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. டீ விற்கும் கால்பந்து ரசிகர் ஷிவ் ஷங்கர் பாத்ரா, ரஷ்யா சென்று உலகக் கோப்பையை பார்க்க ஆசைப்பட்டுள்ளார். அதற்காக கஷ்டப்பட்டு ரூ.60,000 சேர்த்துள்ளார். ஆனால், கூடுதலாக செலவாகும் என தெரிந்தவுடன், தனது ரஷ்யா திட்டத்தை கைவிட்டுள்ளார். கையில் இருந்த காசை வைத்து என்ன செய்வது என தெரியாமல், தனது வீட்டுக்கு அர்ஜென்டினா கொடி கலரில் பெயிண்ட் அடித்துள்ளார். நட்சத்திர அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகரான பாத்ரா, இதை 2014ம் ஆண்டு நடைபெற உலகக் கோப்பையின் போதும் செய்துள்ளார்.
"நான் சிகரெட் பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. ஆனால், நான் அடிமையாக இருக்கும் ஒரே விஷயம் மெஸ்ஸி தான். அதிகம் சம்பாதிக்காவிட்டாலும், நான் சம்பாதிப்பதில் ஒரு பங்கை உலகக் கோப்பைக்காக ஒதுக்கி வைப்பேன்" என்கிறார். இவருக்கு 20 வயது மகளும், 10 வயது மகனும் உண்டு. அவர்களும் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்களாம். தன்னையே ஏமாற்றிவிட்டு, இரவு தூங்குகிற பேரில் மொபைலில் மெஸ்ஸி விளையாடும் போட்டியை பார்ப்பார்கள் என்கிறார் பாத்ரா.
newstm.in