மெஸ்ஸியை குறை சொல்லாதீர்கள்: மாரடோனா
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவன் மாரடோனா, நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை சர்ச்சைகளை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
உலகத்தின் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்ஸி, மாரடோனா போல உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அர்ஜென்டினா ரசிகர்களின் ஆசை. ஆனால், அர்ஜென்டினா அணி, பல சிறப்பான வீரர்களை கொண்டிருந்தாலும், மெஸ்ஸியை மட்டுமே நம்பியுள்ளது. ஐஸ்லாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில், அந்நாட்டு வீரர்கள் திட்டமிட்டு மெஸ்ஸியை சுற்றிவளைத்தனர். அவரிடம் பந்து வரும் போதெல்லாம், அவரை சுற்றி நான்கு வீரர்கள் நின்றதால், அவரால் வழக்கமான பாணியில் இயங்க முடியவில்லை. அவர் அளித்த பல நல்ல பாஸ்களையும் மற்ற வீரர்கள் வீணடித்தனர்.
ஆனால், அர்ஜென்டினாவுக்கு கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி தவற விட்டார். மற்றவற்றில் சிறந்து விளங்கும் மெஸ்ஸி, தொடர்ந்து பெனால்டிகளை தவற விடுவதால், கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். இதுகுறித்து பேசிய முன்னாள் அர்ஜென்டினா கேப்டன் மாரடோனா, "நான் விளையாடியபோது 5 பெனால்டிகளை தவற விட்டிருக்கிறேன். ஆனால், நான் இன்னும் மாரடோனா தான். போட்டி டிரா ஆனதற்கு மெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி காரணம் இல்லை. அவர் முகத்தில் உள்ள அதிருப்தியை பார்த்தால் தெரிகிறது. முழு ஈடுபாட்டுடன் விளையாடி தனது வேலையே சரியாக செய்தார். ஆனால், அணியின் பயிற்சியாளர் சாம்பவோலி, தனது வேலையை சரியாக பார்க்கவில்லை. அதிக உயரம் கொண்ட ஐஸ்லாந்து வீரர்களை சமாளிக்க சரியாகவே திட்டமிடவில்லை. இது வீரர்களின் தவறு இல்லை. பயிற்சியாளர் செய்த தவறு" என்றார்.
newstm.in