1. Home
  2. விளையாட்டு

கட்டம் சரியில்லாத கொலம்பியா ஜப்பானிடம் வீழ்ந்தது!

கட்டம் சரியில்லாத கொலம்பியா ஜப்பானிடம் வீழ்ந்தது!

உலகக் கோப்பை முதல் சுற்றின் கடைசி நாளான இன்று, பலம்வாய்ந்த கொலம்பியாவை, ஜப்பான் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில், 16வது இடத்தில் உள்ள கொலம்பியா, 61வது இடத்தில் உள்ள ஜப்பானுடன் மோதியது. நட்சத்திர வீரர்களை கொண்ட கொலம்பியா, இந்த போட்டியில் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருது பெற்ற கொலம்பியாவின் ஜேம்ஸ் ராட்ரிகெஸ், காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.

போட்டி துவங்கிய இரண்டாவது நிமிடமே, கொலம்பியா வீரர்களை தாண்டிச் சென்ற ஜப்பானின் ஒசாகோ கோலடிக்க முயற்சி செய்தார். ஆனால், கொலம்பியா கோல் கீப்பர் அதை தடுக்க, பந்து மீண்டும் ஜப்பான் வீரர் ககவா கால்களில் வந்து விழுந்தது. ககவா இரண்டாவது ஷாட்டை அடித்தார். அப்போது, கொலம்பியா வீரர் கார்லோஸ் சான்செஸ் அதை தனது கையால் தடுத்தார். எதிரணியின் நேரடி கோல் வாய்ப்பை பவுல் மூலம் தடுத்தால், வார்னிங் இல்லாமல் நேரடியாக ரெட் கார்டு கொடுக்கும் விதி உள்ளதால், சான்செஸ்சுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. 3வது நிமிடத்திலேயே முக்கிய வீரரை இழந்தது கொலம்பியா. ஜப்பானுக்கு கொடுக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் ககவா கோல் அடித்தார்.

எஞ்சியுள்ள சுமார் 90 நிமிடங்களையும், 10 வீரர்களோடு எதிர்கொண்டது கொலம்பியா. முதல் பாதி முடியும் நேரத்தில், கொலம்பியாவுக்கு ஒரு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அதை, அந்த அணியின் குவின்டெரோ, ஜப்பான் வீரர்களின் கால்களில் அடி வழியே ஷாட் அடித்து கோலாக்கினார். முதல் பாதி 1-1 என முடிந்தது.

இரண்டாவது பாதியில், ககவாவுக்கு பதிலாக ஹோண்டா களமிறக்கப்பட்டார். அப்போது ஜப்பானுக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில், ஒசாகோ கோல் அடித்து ஜப்பானுக்கு மீண்டும் முன்னிலை கொடுத்தார். 10 வீரர்களோடு விளையாடிய கொலம்பியாவில் பின்னர் பெரிய வாய்ப்புகள் எதையும் உருவாக்க முடியவில்லை. ஜப்பான் 2-1 என தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like