கங்கா ஸ்நானம் என ஏன் பெயர்?
தீபாவளி திருநாளில் புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு, கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால் நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளே, தீபாவளி திருநாள் என்று பெயர் பெற்றது.
தீபாவளியன்று அதிகாலை, சிவபெருமான், உலகிலுள்ள நீர்நிலை அனைத்திற்குமே கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம்.
இந்த ஐதீகத்தின்படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால்தான், தீபாவளியன்று காலையில் நீராடுவதை கங்கா ஸ்நானம் என சொல்கிறோம்.
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும். எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு, கங்கையில் குளித்த பலன் கிட்டும்.
கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற் கொண்டான். இதன் பயனாக பூவுலகத்திற்குத் திரும்பிய ஆகாயகங்கை ,பரமசிவனின் திருமுடியில் தங்கியது. கங்கை வேகம்தணிந்து பூலோகத்தில் பாய்ந்தது, தீபாவளியன்று தான்.
சிவனிடமிருந்து கங்கை பூமிக்குப் பாய்ந்த நேரமே பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இது அதிகாலை 4 மணிக்கும், 6 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும். சாம்பலாகிய பகீரதனின் சந்ததியினர் கங்கை நதியின் புனித தண்ணீர் பட்டு நற்கதியடைந்த தினமும் இதுவாகும்.
தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின், புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும்.
தீபாவளியன்று, தலையில் எண்ணெய்யை மனைவி தேய்த்துவிடுவது, மிகவும் சிறப்பு என்று கருதப்படுகிறது.
தீபாவளியன்று சூரிய உதயத்துக்கு நான்கு நாழிகைக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
நான்கு நாழிகை என்றால், 96 நிமிடம். அதாவது, 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், அதிகாலை, 4.20க்கு குளித்துவிட வேண்டும். அதிலும் வெந்நீரில் தான் குளிக்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு படைக்கும் படையல் ஆகும். அன்று முன்னோர்கள் வருவதாக ஐதீகம். நரகத்தில் இருப்பவர்கள் கூட, அன்று விடுதலையாகி வீடுகளுக்கு வருவர் என்று புராணங்கள் கூறுகின்றன.
newstm.in
newstm.in