மரங்கொத்தி பறவை சொல்வது என்ன?
வறுமையில் வாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் , ஞானி ஒருவரை சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அடிப்படையில் எந்த விதமான வேலைக்கும் செல்லாமல்,சோம்பேறியாக திரிபவன் அந்த இளைஞன் என்பதை புரிந்து கொண்ட ஞானி , அவனுக்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார்.
“ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், "மூட்டாள்ப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்றான் .
அதற்கு பதிலளித்த பறவை, ""மனிதனே நான் என் உணவைத்
தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்..'' என்றது.
அந்த மனிதன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தின் பல இடங்களை கொத்தியதில் , மரத்தின் ஒரு இடத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது. தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.
இந்தக் கதையைச் சொல்லிய ஞானி , " உனது வறுமை ஒழிய ஏராளமான வழிகள் உள்ளது. நீயும் இந்தப் பரந்த உலகத்தில் வேலையை , பொருள் சம்பாதிக்கும் வழியை தேடு. உனக்கும் பொருளும் நல்ல வேலையும் கிடைக்கும். அதை விட்டு விட்டு சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.
இது ஏதோ அந்த ஒரு இளைஞனுக்கு மட்டுமான கதையா? நிச்சயம் இல்லை. எனது தகுதிக்கு உரிய வேலை இல்லை , சரியான அங்கீகாரம் இல்லை , சம்பளம் இல்லை . இப்படி பல ‘இல்லை’களை காரணங்களாக சொல்லிக் கொண்டு இல்லாமல் கண்ணில் படும் கதவுகளை , வாய்ப்புகளை தட்டுவோம் . வாழ்க்கை வளமாகும். இந்த நாளும் இனிய நாளே.
newstm.in