நாசகார சக்திகளா நகர்ப்புற நக்ஸல்கள்: அரவிந்தன் நீலகண்டன் விளக்கம் - பகுதி 1
நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும், 'அர்பன் நக்சலிசம்' பற்றிய கலந்துரையாடல் கருத்தரங்கம், சென்னையில் நடந்தது.
'தேசிய சிந்தனை கழகம் - தமிழ்நாடு' மற்றும் 'சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதை மன்றம் - தாம்பரம்' இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மெய்யியல் துறை முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற இணைப்பேராசிரியருமான, முனைவர் கே.சம்பத்குமார் தலைமை வகித்தார். 'ஸ்வராஜ்யா' கன்சல்டிங் எடிட்டர், அரவிந்தன் நீலகண்டன் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், முனைவர்,கே. சம்பத்குமார் பேசியதாவது:
'அர்பன் நக்சலிசம்' அல்லது 'நகர்ப்புற நக்சலிசம்' மிக ஆபத்தானது. மார்க்ஸ் அவர்களின் கொள்கை விளக்கத்தை தவறாக செயல்படுத்தும் கம்யூனிஸ்டுகள், நகர்ப்புறங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, கல்வி நிறுவனங்களையும், ஆராய்ச்சி நிலையங்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
உண்மையைச் சொல்லப்போனால், மார்க்சுக்கே தன் கொள்கையை பற்றிய தெளிவு கிடையாது. ஒரு வித வெறுப்பு அரசியல் கொள்கையை மட்டுமே அவர் கடைபிடித்தார். பொதுவாக நக்சலைட்டுகள் என்றாலே கையில் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் என்றே நினைக்கிறோம். அனால் நகர்ப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருக்கும், தங்களை சிந்தனையாளர்கள் என கூறிக்கொள்ளும் அறிவு ஜீவிகள், தங்கள் கம்யூனிச கொள்கைகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெர்மனியில், நாசிசவாதிகள் யூதர்களை கொன்று குவித்தனர். ஆனால் யூதர்களின் இனம், கலாசாரம் போன்ற அனைத்தையும் அழிக்கும் பணியை கம்யூனிஸ்டுகள் மேற்கொண்டனர்.
நம் நாட்டில் படை எடுத்த கஜினி முகமது உள்ளிட்ட வெளிநாட்டினர், நம் கோவில்களின் சொத்துகளை கொள்ளை அடித்த சம்பவங்கள் மட்டுமே நம் வரலாற்று பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவர்கள் நம் அறிவு சுரங்கங்களை அழித்தார்கள் என்பதே உண்மை.
நம் நாட்டில் இருந்த கல்வி நிறுவனங்கள், திட்டமிட்டு அழிக்கப்பட்டன.
நற்சிந்தனை உள்ளவர்கள் இருக்கவே கூடாது என சதி செய்யப்பட்டது. அதன் நீட்சியாகவே, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், அதன் பின்னரும், மெக்காலே கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.
இன்று இருக்கும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் நக்சல் கொள்கைகளை பரப்பும் நோக்குடனான சிந்தனையாளர்களே அதிகம் உள்ளனர்.நாடு முழுவதும் இவர்கள் விரவி கிடக்கின்றனர். பிராமணர்களை வெறுப்பதே இவர்களின் பிரதான கொள்கையாக உள்ளது.
இங்கு பிராமணர்கள் என்பது ஒரு ஜாதியை குறிப்பதல்ல; கல்வி கற்போர் மற்றும் அதை கற்பிப்போர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நல்ல சிந்தனையாளர்களை குறிக்கும்.
இது போன்ற வெறுப்பு உணர்ச்சிக்கு கரணம் ஒரு வித உளவியல் பிரச்சினையே ஆகும். இன்றைய பெரும்பாலான கல்வி நிறுவனங்களில், இது போன்ற எதிர்மறை சிந்தனையாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்களின் செல்வாக்கு நீதித்துறை வரை நீண்டுள்ளது. இவர்கள் ஏதேனும் வழக்கு தொடர்பாக நீதிபதிகளை நாடினால் நள்ளிரவில் கூட இவர்களின் வழக்கு விசாரிக்கப்படும். ஆனால், நாட்டில் வசிக்கும், 100 கோடிக்கு அதிகமானோர் விரும்பும் ஒரு விஷயம் தொடர்பான வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் தயங்குகிறது. அதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக கூறுகின்றனர். இதுதான் இன்றைய நிலை.
2001ம் ஆண்டு நடந்த, மாவோயிஸ்டுகள் மாநாட்டில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 'நகர்ப்புறங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்டவர்களை ஒருங்கிணைப்போம்' என கூறப்பட்டது. இதிலிருந்து ஒன்றை புரிந்துகொள்ள முடிகிறது; நக்சலிசம் என்பது ஆயுதம் ஏந்திய போராட்டமாக மட்டும் இன்றி, உணர்ச்சிகளை தூண்டும், அறிவு ஜீவிகளின் விபரீத செயலாகவும் உருவெடுத்துள்ளது.
இதைத்தான் நகர்ப்புற நக்சலிசம் என்கிறோம். இவர்களுக்கு, கல்வி துறை, ஊடக துறை மட்டுமின்றி அதிகார வரகத்திலும் செல்வாக்கு உள்ளது. சாதாரண மக்களை மட்டுமின்றி, படித்தவர்ககையும், மிக உயரிய பதவியில் உள்ளவர்களையும் கூட மூளைச் சலவை செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து மிக விரிவாக திரு.அரவிந்தன் பேசியுள்ளது அடுத்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in