இவர்களது வரலாற்றை யார் எழுதுவார்கள்?
500 ஆண்டுகளாக காத்திருந்த அயோத்தி விவகாரம் கடந்த நவம்பர் 6ம் தேதி அமைதியாக நிறைவு பெற்றிருக்கிறது. ஆனாலும், இதற்கு பின்னால் இருக்கும் இந்துக்களின் தியாகத்தை நாம் மறந்துவிடக் கூடாது. சர்ச்சைக்குறிய இடத்தில் பாபர் மசூதி இருந்தது, அதனால் 1992 டிசம்பர் 6ம் தேதி வரை இஸ்லாமியர்கள் வெற்றியாளர்களாக இருந்தனர். எனவே, அவர்கள் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. அதன் பின்னர் சர்ச்சைக்குறிய இடம் வழக்கில் சிக்கியதாலும், இடிப்பதைப் போல கட்டுவது எளிது கிடையாது என்பதாலும் இஸ்லாமியர்கள் ஜனநாயக ரீதியான போராட்டத்தை மட்டுமே முன்னெடுத்தார்கள்.
ஆனால் இந்துக்கள் ராமர் கோயில் மீட்பு போரட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். மன்னர்கள் ஆட்சியில் மட்டும் அல்லாமல், ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கூட இந்த போராட்டம் தொடர்ந்து வந்துள்ளது. பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 அன்று ஏற்பட்ட சம்பவம் உட்பட 3 முறை இடிக்கப்பட்டுள்ளது.
1980களில் சிறு குழுக்கள் மட்டுமே நடத்தி வந்த ராமர் கோயில் மீட்பு போராட்டம் விஸ்வ ஹிந்து பரிஷத் ஈடுபடத் தொடங்கியதும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. பிறந்த ஊரை விட்டு வெளியே செல்லாதவர்கள் கூட ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று அணிலைப் போல உதவிகள் செய்தனர். இன்னொரு புறம், கரசேவை தொடர்பான அறிவிப்புகள் அவ்வப் போது வந்து கொண்டிருந்தன. அப்படி 1990 அக்டோபர் 30ம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுகிறது. நாடு முழுவதும் இருந்து ராமபக்தர்கள் அயோத்தி நோக்கி படை எடுக்கிறார்கள். ராமர் கோயில் கட்டவதற்காக ராம பக்தர்கள் ஊர்வலமாக செல்கிறார்கள்.
இந்நிலையில், அப்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங் சிட்டுக்குருவியை கூட அயோத்தி உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று கர்ஜனை செய்கிறார். அதையும் மீறி பக்தர்கள் ஊர்வலமாக செல்கிறார்கள். சரயு நதியின் பாலத்தில் பக்தர்கள் நுழைந்ததும் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. பாலத்தில் இருந்து நதியில் குதித்து நீரில் மூழ்கி இறக்கிறார்கள். குண்டடிப்பட்டு இறக்கிறார்கள். ஆனால் அந்த சூழ்நிலையில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்த எந்த விதமான கணக்கும் இல்லை. முதல் கரசேவைக்கு சென்று இன்று வரை மாயமானவர்கள் வட இந்தியாவில் பலர் இருக்கிறார்கள்.
இந்த வலி, வேதனை மற்றவர்களை விட தமிழர்களுக்கு நன்கு புரியும். காரணம் திருநெல்வேலியில் மாஞ்சோலை போராட்டத்தை சந்தித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக பல போராட்டங்கள் நடந்தன. இதன் உச்சமாக 23.07.1999ஆம் ஆண்டு புதிய தமிழகம் தலைமையில் பல கட்சிகள் இணைந்து பேரணி நடத்தின. பேரணியில் இருந்தவர்கள் தாமிரபரணி ஆற்றின் பாலத்திற்கு அருகே வந்ததும் இரு முனையில் இருந்தும் போலீசார் மடக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உட்பட 17 பேர் பலியாயினர். இது குறித்து பின்னர் சில அமைப்புகள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் அயோத்தி பற்றி ஆவணங்களில் கூட முதல் கரசேவையில் பலியானார்வர்கள் பற்றிய ஆவணம் இல்லை.
இப்போது அயோத்தி விவகாரம் சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையிலாவது அயோத்தியாவின் முதல் கரசேவையின் போது பலியானவர்கள் பற்றிய ஆவணங்களை சேகரிக்க வேண்டும். அந்த குடும்பங்களின் இன்றைய நிலையை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். இது ராமர் கோயிலின் அஸ்திவாரத்திற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயமாகும்.
Newstm.in
newstm.in