Logo

மறைக்கப்பட்ட தலைவர்களின் வரலாறு: மாற்றி எழுதப்பட வேண்டிய மாபெரும் சரித்திரம்!

சுய புராணம் பாடவும், சொந்த பந்தங்கள் தொடர்ந்து அதிகார வர்க்கத்தில் இருக்கவும் இவ்வகை தலைவர்கள் செய்த மாபெரும் தவறுகளால் இன்றைய இளைஞர்களுக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உண்மை வரலாறு தெரியாமலேயே போய்விட்டது. அது வேண்டுமென்றே மறைக்கப்பட்டது.
 | 

மறைக்கப்பட்ட தலைவர்களின் வரலாறு: மாற்றி எழுதப்பட வேண்டிய மாபெரும் சரித்திரம்!

"இந்தியா என் தாய்நாடு; இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்தோர். இந்நாட்டையும், நாட்டு மக்களையும் உளமாற நேசிக்கிறேன்" என பள்ளிக்கூடங்களில், காலை நேர பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர்கள் ஒருசேர உறுதிமொழி எடுப்பது வழக்கம். 

ஆனால், அவர்களே பள்ளிப்பருவம் முடிந்து, கல்லூரிக்குள் நுழைந்ததும், அரசியல் வாசம் அவர்களை சுண்டி இழுக்கிறது. ஜனநாயக நாட்டில், 18 வயது இளைஞனுக்கு அரசியல் ஆர்வம் வருவது வரவேற்கத்தக்கதே. ஆனாலும், அவன் எவ்வகை அரசியல்வாதிகளால் ஈர்க்கப்படுகிறான் என்பதுதான்  கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒன்று.

மதத்தின் பெயரிலும், ஜாதிகளின் பெயரிலும், மொழியின் பெயரிலும் கட்சி நடத்தும் அல்லது அரசியல் செய்யும் நபர்களைத்தான் இவர்கள் பெரும்பாலும் தலைவனாக பார்க்கின்றனர். அவர்களின் பொறித்தெறிக்கும் பேச்சால் ஈர்க்கப்பட்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். 

மாணவர்களுக்குள் ஏற்படும் மோதல் போக்கு, ஜாதிய வன்முறையாகவும், ஊர் சண்டையாகவும், பல உயிர்களை காவு வாங்கும் கலவரமாகவும் வெடிக்கிறது. பலம் படைத்தவனே பாக்கியவான் ஆகிறான். பின் அவன் வைத்ததே சட்டம் ஆகிறது. இப்படித்தான் ஒவ்வொரு அரசியல்வாதியும் இன்று உருவாகின்றனர்.  

இப்படி சுய லாபத்திற்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் ஒட்டு மொத்த சமூகத்தையும் கெடுத்து, பரம்பரை பரம்பரையாய் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அரசியல் தலைவர்களால், நம் நாட்டின் உண்மை சரித்திரமும் மூடி மறைக்கப்பட்டது. 

சுய புராணம் பாடவும், சொந்த பந்தங்கள் தொடர்ந்து அதிகார வர்க்கத்தில் இருக்கவும் இவ்வகை தலைவர்கள் செய்த மாபெரும் தவறுகளால் இன்றைய இளைஞர்களுக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உண்மை வரலாறு தெரியாமலேயே போய்விட்டது. அது வேண்டுமென்றே மறைக்கப்பட்டது.

பள்ளி பாட புத்தகத்தில், வந்தேறிகளும், ஆக்கிரமிப்பாளர்களும், வியாபாரத்தின் பெயரில் நாட்டில் நுழைந்து நம்மை ஆட்டிப்படைத்த ஆங்கிலேயர்களும் நாயகர்களாக சித்தரிக்கப்பட்டனர். அவர்களுக்கு கூஜா தூக்கிய பலர், பெரும் தலைவர்களாக போற்றப்பட்டனர். 

உண்மையில் தேசிய சிந்தனையுடன், ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த தலைவர்களை பற்றிய சுவடே வெளியில் தெரியாதபடி பார்த்துக்கொண்டனர் இந்த சுயநல கயவர்கள். நாடுமுழுவதும் சுதந்திர போராட்டங்கள் நடந்தாலும், அதற்கு முதலில் வித்திட்டது நம் தமிழ் மண்தான். ஆனால் அதற்கான ஆதாரங்கள் சரிவர பதிவு செய்யப்படாததால் நம் மன்னர்களின், தலைவர்களின் வீரம் நமக்கே தெரியாதபடி செய்துவிட்டனர். 

காந்தியையும், நேருவையும் மட்டுமே அறிந்திருந்திருக்கும் இக்கால இளைஞர்களுக்கு, அவர்களை தாண்டி எத்தனை தலைவர்களை தெரியும் என்பது சந்தேகமே. ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தின் போது மேற்கண்ட இரு தலைவர்கள் மட்டுமே அதிக நாட்கள் சிறையில் இருந்தது போலவும், அவர்கள் மட்டுமே துன்பம் அனுபவித்தது போலவும் நம் வரலாற்று பாடங்களில் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

காந்தியும், நேருவும் சிறைக்குள் புத்தகங்கள் படித்ததையும், கடிதம் எழுதியதையும் வரலாறாக படிக்கும் நமக்கு, ஆங்கிலேயர்களால் அளிக்கப்பட்ட உண்மையான சிறை தண்டனை எப்படி இருந்தது என்பது திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது. அந்த கொடுமையை அனுபவித்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியில் தெரியாமல் அமுக்கப்பட்டுள்ளது. 

கருட புராணத்தில் சொல்லப்பட்ட கடுமையான தண்டனைகளுக்கு ஒப்பான தண்டனைகளைத்தான், ஆங்கிலேயர் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை அனுபவித்த தலைவர்கள், தியாகிகள் பற்றிய தகவல்கள் வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவில்லை. 

மாறாக, ஆங்கிலேயருக்கு ஆதரவாகவே கடைசிவரை செயல்பட்டு, ஆட்சி அதிகாரத்திற்காகவும், அதன் பின் ஓட்டு வங்கி அரசியலுக்காகவும் வந்தேறிகளை புகழ்ந்து தள்ளிய தலைவர்களே வரலாற்று நாயகர்களாகவும், தேச தலைவர்களாகவும், தியாகிகளாகவும், வரலாற்று புத்தகங்களில் உயர்ந்து நிற்கின்றனர். 

அப்படி திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாற்றையும், சுதந்திரத்திற்காக உண்மையிலேயே போராடி, சிறையில் நரக வேதனை அனுபவித்த தியாகிகளின், தன்னிகரற்ற தலைவர்களின் சரித்திரத்தை வாசகர்களுக்கு தெரியப்படுத்தவே இந்த கட்டுரை. இதன் தொடர்ச்சியில், பல உண்மை தலைவர்களின் உருக்கமான வரலாற்றை கண்போம். 

தொடரும்...

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP