இடஒதுக்கீடு குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது: மோடி குற்றச்சாட்டு
மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்; பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
சோலாப்பூர் - உஸ்மானாபாத் இடையே அமைக்கப்பட்ட, தேசிய நெடுஞ்சாலை 211ஐ, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இது தவிர, பாதாள சாக்கடை திட்டம், கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
ஏழை, எளியோர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் தொழிலாளர்கள் பலன் பெறும் வகையில், 30 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்திற்கு, 1811 கோடி ரூபாய் செலவாகும் எனவும், அதில், 750 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் எனவும், பிரதமர் மோடி கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருந்திரளான கூட்டத்தினர் இடையே பிரதமர் மோடி பேசியதாவது:
பொருளாதாரத்தில் பின் தங்கியோர் பலன் அடையும் வகையில், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவால், அனைத்து தரப்பினரும் பலன் அடைவர். , பொருளாதாரத்தில் பின் தங்கிய, எந்த பிரிவை சேர்ந்தவராயினும், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கும்.
ஆனால், இந்த மசோதா குறித்து சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த மசோதா குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் பலன் அளிக்கும் இந்த மசோதா, ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
newstm.in
newstm.in