கமல் கட்சியின் அங்கீகாரம் ரத்து? வழக்கறிஞர் புகாரால் பரபரப்பு
தேர்தல் பிரசாரத்தின் போது, குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் வகையிலும், மக்களிடையே மத ரீதியிலான மாேதலை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு எதிராக, வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய், தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளார். அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபை இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், தன் தலைமையிலான, மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‛நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து’ என்றார்.
காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தீவிரவாதி எனக் கூறிய கமல் அத்துடன் நிற்காமல் அவர் ஒரு ஹிந்து என்றும், அவரே நாட்டின் முதல் தீவிரவாதி எனவும் கூறினார். கமலின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய், கமல்ஹாசனுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளார். அதில், ‛மதத்தின் பெயரில் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசன் தொடர்ந்து பேசி வருகிறார். நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என பேசியிருப்பதன் மூலம், நாட்டு மக்களிடையே பிரிவினை துாண்டி, கலவரத்திற்கு வித்திட்டுள்ளார்.
எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். அதே போல், அவர் 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். அவரின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியை சேர்ந்த பிரபல வழக்கறிஞரான அஷ்வினி குமாரின் புகார் மீது தேர்தல் கமிஷன் உச்சபட்ச நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அவரது கட்சியின் அங்கீகாரமே ரத்தாகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், கரூரில் தேர்தல் பிரசாரம் செய்த கமல், தன் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எழுந்த கண்டனங்களால், அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்யாமலேயே, அந்த கூட்டத்தை ரத்து செய்து புறப்பட்டுவிட்டார்.
newstm.in
newstm.in