கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக பேசமாட்டேன்- ராகுல் காந்தி பேட்டி
லோக்சபா தேர்தலில் கேரளாவில் இடதுசாரிகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். வயநாட்டில் இடதுசாரிகளின் கூட்டணியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிபி சுனீர், ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, நான் முக்கியமான விஷயம் ஒன்றை இந்த நாட்டிற்கு தெரிவிப்பதற்காக இங்கு வந்து இருக்கிறேன். இது ஒரே நாடு என்பதை நாம் உணர வேண்டும். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு அனைத்தும் இந்தியா தான் என்பதை உணர்ந்ததால் கேரளாவுக்கு வந்துள்ளேன்.
தென்னிந்திய மக்கள் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் , மத்திய அரசும் தங்களை கைவிட்டுவிட்டதாக நினைக்கிறது. நாங்கள் அப்படி இல்லை என்று நான் நிரூபிக்க விரும்புகிறேன். மத்திய அரசு தென்னிந்திய கலாச்சாரம், மொழிகளுக்கு எதிராக பேசுகிறது. நாங்கள் அதை மாற்றிக்காட்டுவோம்.
வேலைவாய்ப்பு இல்லாமை, விவசாயிகள் துயரம் தான் இன்றைய முக்கிய பிரச்சனை. அதை நாங்கள் சரி செய்வோம். எனக்கு தெரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் நண்பர்கள் கண்டிப்பாக எனக்கு எதிராக பேசுவார்கள்.
எனக்கு எதிராக அவர்கள் பிரச்சாரம் செய்வார்கள் என்று தெரியும். ஆனால் நான் அவர்களுக்கு எதிராக பேச மாட்டேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக தான் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
newstm.in
newstm.in