புயலை வைத்தும் அரசியல் செய்வதா? : மம்தாவுக்கு மோடி கண்டனம்
ஃபனி புயல் விஷயத்தை வைத்தும் அரசியல் செய்வதா? என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஃபனி புயல் பாதிப்பு விவரங்கள் குறித்து, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் மட்டும் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், புயல் பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிய, மம்தாவை தொலைப்பேசியில் இரண்டு முறை தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை. தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் பிறகு பேசுவார் என பதில் வந்தது என்று, மம்தாவின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், தம்லுக்கில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு வேகத்தடையாக இருந்துவரும் மம்தா பானர்ஜி, இன்று தமது அகந்தையால், ஃபனி புயல் விஷயத்திலும் அரசியல் செய்கிறார். புயல் பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிய, நான் இரண்டு முறை அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும் அவர் என்னிடம் பேசவில்லை. பின்னர், அவராகவாவது என்னை தொடர்பு கொண்டு பேசியிருக்க வேண்டும். அவ்வாறும் செய்யவில்லை என்று பிரதமர் வருத்தத்துடன் கூறினார்.
பேசவிரும்பவில்லை : மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், பிஷ்ணுபூரில் இன்று தேர்தல் பிரசாரத்தில் மம்தா பேசும்போது, "தேர்தல் நேரம் என்பதால், பிரதமருடன் பேச விரும்பவில்லை. அத்துடன், விரைவில் காலாவதியாக உள்ள பிரதமருடன், புயல் பாதிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தும் எண்ணமும் இல்லை. மே 23 -க்கு பிறகு வரவுள்ள புதிய பிரதமருடன் நான் பேசிக் கொள்கிறேன்" எனக் கூறினார்.
newstm.in
newstm.in