தேர்தலுக்கு பின்பே பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு: மம்தா திட்டவட்டம்
பிரதமர் பதவிக்கு வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தலுக்கு பின்னர் முடிவெடுக்கலாம், அதுபற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கடந்த 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து வைத்தார். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார். இதற்கு திமுகவின் தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், மத்திய அளவில் காங்கிரஸ் தோழமை கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "பிரதமர் பதவி வேட்பாளர் யார் என்பது குறித்து இப்போது பேசுவது சரியாக இருக்காது. தேர்தல் முடிவடைந்த பின்னர் இதுகுறித்து கருத்து தெரிவிப்பது தான் சரி. மேலும் இதுகுறித்து ஆலோசித்து தான் முடிவெடுக்கப்படும். அதற்கான நேரம் வரட்டும்" என்று கூறியுள்ளார்.
newstm.in
newstm.in