எதிர்க்கட்சி அந்தஸ்தை மீண்டும் இழந்த காங்கிரஸ்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சந்தித்துள்ள படுதோல்வியிலிருந்து அக்கட்சித் தலைமையும், தொண்டர்களும் மீண்டுவர நிச்சயம் வெகுநாட்கள் ஆகும். ஆனால், அதற்குள் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலை மீது இன்னொரு இடி விழுந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் இந்த முறையும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து விட்டது என்ற செய்திதான் அது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான். எனினும், தொடர்ந்து இரண்டாவது முறையாக, அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வியிருப்பது, அரை நூற்றாண்டுக்கு மேலாக நாட்டை ஆண்ட தேசியக் கட்சிக்கு விழுந்த சம்மட்டி அடியாகவே பார்க்கப்படுகிறது.
2014 மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் வெறும் 44 தொகுதிகளையே காங்கிரஸ் கட்சியால் கைப்பற்ற முடிந்தது. இதன் விளைவாக, மக்களவையில் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சி அந்தஸ்தை அக்கட்சியினால் பெற இயலவில்லை. தற்போதும் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற, மொத்தமுள்ள 543 எம்.பி. தொகுதிகளில், குறைந்தபட்சம் 10 சதவீதம் இடங்களில் ஒரு கட்சி வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது 54 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in