அரசியலில் நுழைய வேண்டும் என்ற ஆசையே இருந்தது இல்லை - மன் கீ பாத்தில் பிரதமர் மோடி!!!
இன்று 59வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் தேசிய கேடட் கார்ப்ஸ் மாணவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அரசியலில் நுழைய வேண்டும் என்ற எண்ணமே தனக்கு இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் உரையாற்றிய ஒரு மாணவர், அரசியலுக்குள் வந்திருக்கவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என்ற கேள்வியை முன் வைக்கிறார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு ஆசை வரும் என்றும், தனக்கும் அப்படிதான் என்றும் கூறிய அவர், எத்தகைய ஆசை இருந்த போதும், அரசியலுக்குள் நுழைவது பற்றி தான் சிந்தித்ததே இல்லை என்று கூறியுள்ளார். இப்போது அரசியலும், இந்தியாவுமே தனது உலகம் என்று ஆன நிலையில், அரசியல் இல்லையென்றால் என்ன செய்திருப்பேன் என்பது குறித்து யோசித்ததே இல்லை என்று கூறியுள்ளார்.
மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எல்லோரையும் போல தனக்கென்ற சில தனிப்பட்ட குணங்கள் நிறைய மாறியுள்ளதாகவும், அதிகமாக புத்தகம் வாசிக்கும் தனது பழக்கம் கூகுளினால் பாழாகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எந்த சந்தேகம் என்றாலும் உடனுக்குடன் தேடி பிடித்து தெளிவடைய கூகுள் இருப்பதால் புத்தகம் வாசிக்கும் பழக்கமே நின்று விட்டது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
மேலும், பள்ளியில் படிக்கும்போது திட்டு வாங்கியதுண்டா என்ற கேள்விக்கு, தேசிய கேடட் கார்ப்ஸ் மாணவராக இருந்தாலும், தான் ஓர் அமைதியான மாணவன் என்று கூறியுள்ளார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு தினத்தையும் முழுமையாக வாழ்ந்து முடிக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்திய மக்களின் நலனே தற்போது தனது வாழ்க்கையாகி விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கிய அவர், இந்திய பள்ளிகள் அனைத்திலும் தேசிய கேடட் கார்ப்ஸ் அமைப்பில் உள்ள மாணவர்களை, நடைபெறவிருக்கும் "ஃபிட் இண்டியா" நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.
Newstm.in
newstm.in