நேரு நினைவு அருங்காட்சியகம் : காங்கிரஸ் தலைவர்கள் நீக்கம் - மோடி தலைமையிலான புதிய குழு !!
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் புதிய தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணை தலைவராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் தீன்மூர்த்தி பவனில் அமைந்துள்ளது நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுமார் 16 ஆண்டுகள் இந்த இடத்தில் வசித்து வந்ததை தொடர்ந்து, அவரின் நினைவிடமாக இந்திய மக்களால் இன்றும் போற்றப்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தில், ஜவஹர்லால் நேருவின் அயல்நாட்டு பயணங்களின் போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசுகள், அவர் அன்றாட வாழ்வில் உபயோகித்த பொருட்கள், அவர் வாசித்த புத்தகங்கள் என அனைத்தும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்களை, தலைவர்களாக கொண்டிருந்த இந்த அருங்காட்சியத்தை மறு சீரமைத்து, நேருவிற்கு என்று தனியாக இல்லாமல், இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள், வருங்கால பிரதமர்கள் என அனைவரது நினைவு அருங்காட்சியமாகவும் இதை மாற்றும் நோக்கத்துடன், அதன் உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் நீக்கி விட்டு, பிரதமர் மோடி தலைமையிலான புதிய உறுப்பினர் குழுவை நியமித்துள்ளது மத்திய அரசு.
இதை தொடர்ந்து, இந்த அருங்காட்சியகத்தின் துணை தலைவராக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், உறுப்பினர்களாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரமேஷ் பொக்ரியால், பிரகாஷ் ஜவடேக்கர், வி.முரளிதரன், ப்ரஹலாத் சிங் படேல், ஐசிசிஆர் தலைவர் வினய், ப்ரசார் பாரதி தலைவர் ஏ.சூர்ய பிரகாஷ், மற்றும் தொலைகாட்சி நிருபர்களான ராஜத் ஷர்மா, ப்ரசூன் ஜோஷி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், மத்திய அரசின் இந்த தீர்மானத்திற்கு, எதிர்கட்சியான காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in