நீதித்துறையிலும் பாலியல் தொல்லை: #MeToo-வுக்கு ஆதரவு அளித்த நீதிபதி
பாலியல் ரீதியான தொந்தரவுகளை பெண்கள் அம்பலப்படுத்தும் இந்தச் சூழல் வரவேற்க வேண்டியது எனவும் பாதிக்கப்படும் பெண்கள் துணிச்சலாகப் போராட வேண்டும் என்று பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மும்பையில் வியாபாரிகள் அமைப்பின் மகளிர் பிரிவு சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுதம் படேல் கலந்துகொண்டார். அப்போது அவர்
பெண்கள் முன்னெடுத்து வரும் #METoo இயக்கம் குறித்து பேசி வரவேற்பு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், '' பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம் அவர்கள் பெண்கள். இவர்கள் ஆண்கள். அவ்வளவு தான். ஆண்கள் எப்போதுமே தாங்கள்தான் அதிக அதிகாரம் படைத்தவர்கள் என்று நினைக்கிறார்கள்.
தற்போது இந்த இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் பாதிப்புகளைத் தைரியமாக வெளியே சொல்லி வருகிறார்கள். இதற்கு அனைவருமே ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பெண்கள் தைரியமாக வெளியே சொல்லவேண்டும். அந்த நபரின் பெயரை அம்பலப்படுத்த வேண்டும். பெண்கள் எத்தனைத் துறையில் திறமையாக இருந்தாலும் அவர்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் தினம் தினம் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. சட்டத்துறையிலும் இவ்வாறு நிகழ்கின்றது. என் முன் இது போல ஏதேனும் நடந்தால் நான் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்.
இதனை பெண்கள் சட்டரீதியாக கொண்டு செல்ல வேண்டும். சற்று காலதாமதம் ஏற்படலாம். பாலியல் துன்புறுத்தல் விஷயங்களைப் பேச துணிவு வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு துணிச்சல் அவசியம்'' என்றார்.
அமெரிக்காவில் நடிகர் பில் காஸ்பி, 14 ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்த பாலியல் அத்துமீறல் குற்றத்துக்கு தண்டனைக்குள்ளாகி இருக்கும் வழக்கை மேற்கோள் காட்டிப் பேசினார்.
Newstm.in
newstm.in