ஜம்மு - காஷ்மீர் : 132 நாட் -அவுட் !
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து, மத்திய அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு, நாடாளுமன்ற மக்களவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநிலத்தில் ஏற்கெனவே மொத்தம் 132 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி ஜூலை 3 -ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, அங்கு அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்த தீர்மானத்தை மத்திய அரசு மக்களவையில் இன்று கொண்டு வந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுவதாக இன்னமும் சிலர் கூறி வருகின்றனர். உண்மையில் அங்கு, இந்தியாவுக்கு எதிரான செயல்பட்டு வருபவர்களின் மனதில் தான் பயம் பற்றி கொண்டுள்ளது.
அம்மாநில மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மாறாக, வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்ல தீவிரமாக முயன்று வருகிறோம்.
அந்த மாநிலத்தைச் சேர்ந்த சாமானிய மக்களின் மனதில் பயங்கரவாதம் குறித்த பயம் இனி துளியும் இருக்கக்கூடாது என மத்திய அரசு விரும்புகிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், சில மாதங்களுக்கு முன் அங்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் வன்முறை, பயங்கரவாதத் தாக்குதல் துளியும் தலை தூக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதேபோன்று, ஜம்மு -காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்படும்.
குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்ந்து அமல்படுத்தப்படுவதால், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் ஜனநாயகத்தை மத்திய அரசு சிதைத்து வருவதாக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கு முன் அங்கு, காங்கிரஸ் ஆட்சி காலங்களில் மட்டும் 93 முறை உட்பட மொத்தம் 132 முறை, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி அங்கு ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைத்தவர்கள் இன்று ஜனநாயகம் குறித்து எங்களுக்கு பாடம் எடுக்கலாமா? என்று அமித் ஷா கேள்வியெழுப்பினார்.
newstm.in
newstm.in