Logo

வல்லரசின் அடையாளம் காட்டும் இந்தியா!!

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். அவரின் கனவு நனைவாக்கும் பாதையில் தற்போது சென்று கொண்டிருக்கிறது இந்தியா.
 | 

வல்லரசின் அடையாளம் காட்டும் இந்தியா!!

சர்வ தேச உறவுகளில் தனக்கு என்று ஒரு பாதையை தேர்வு செய்து, நமக்கு நாமே பாராட்டிக் கொண்டு நடப்பதுதான்  இது வரையில் இந்தியாவின் சரித்திரமாக இருந்து வந்தது. நேருவின் ஆட்சிக்காலத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் நடுவாந்தரமாக முடிவுகள் எடுக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டன.

பஞ்சசீலக் கொள்கை, அணி சேராக் கொள்கை என்று நேரு உருவாக்கிய கொள்கைகள் இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால், அதன் பலன் என்னவோ இந்தியாவிற்கு இழப்புதான். சீனாவுடன் நட்பு கொண்டாட நேரு உருவாக்கிய பஞ்சசீலக் கொள்கையை மீறி அந்த நாடு இந்தியாவின் மீது போர் தொடுத்து, இந்தியாவின் சில பகுதிகளை பிடித்துக் கொண்டது. இதனால் ஏற்பட்ட துக்கத்திலேயே உயிர் துறந்தார் நேரு மாமா. இது தான் அவரின் பஞ்சசீலக் கொள்கைக்கு கிடைத்த பரிசு.

நரசிம்ம ராவ் பிரதமராக பதவி வகித்தபோது, உலக வணிக அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில், இந்தியா, தற்சார்பு முறையை கடைபிடிக்க வழியில்லாமல், இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகளின் கண்டிப்பையும் மீறி, அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு வந்தது. 

வளைகுடாப் போர் காலங்களில், ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்று, ஓட்டெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட போது பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அரசு, அணி சேரா கொள்கைப்படி நடுநிலை வகிப்பதாக கூறியது. இந்த விவகாரத்தில் கூட எந்த முடிவும் எடுக்காமல் நடுநிலை வகித்தால் இந்தியா எந்த பிரச்சனைக்கு தான் சுயமாக முடிவு எடுக்கும் என்று உலக நாடுகள் விமர்சனம் செய்தன.

அவர்களின் விமர்சனங்களுக்கும், ஏளன பேச்சுக்களுக்கும் பதிலளிக்கும் வகையில், இந்திய வரலாற்றில் முதல் முறையாக 16 நாடுகளுக்கு இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மற்ற 15 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்று சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவின் இந்த தனித்துவமான நிலைப்பாடு அனைத்து சர்வதேச நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே, சர்வதேச அளவில் நீ உமி கொண்டுவா, நீ அரிசி கொண்டு வா 3 பேரும் ஊதி சாப்பிடுவோம் என்பதற்கு தலையாட்டுவதன் மூலம் தான் சர்வதேச உறவுகளை ஏற்படுத்த பல நாடுகளும் துடிக்கின்றன. இந்தியா மிகப் பெரிய சந்தை, அதை தன் வசப்படுத்திவிட வேண்டும் என்பது தான் பல நாடுகளின் எண்ணமும் கூட.

இத்தகைய ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், வரும் காலங்களில் வேறு சில அழுத்தம் கொடுக்க அந்த நாடுகள் முடிவு செய்யும். அதை சமாளிக்க தேவையான ஆற்றல் கொண்ட அரசு தான் இது போன்ற முடிவுகளை மேற்கொள்ள முடியும். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தனக்கு எதையும் எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருப்பதை இதன் மூலம் சர்வதேச அரங்கில் நிரூபித்துள்ளது.

மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதானி, அம்பானிகளின் பினாமி அரசு தான் இது என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் பேசுகின்றன. ஆனால் விவசாயிகள், சிறு குறு தொழிலதிபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்திற்காகவே ஆசியான் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகள் இடையிலான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடவில்லை என்பது இப்போதேனும் அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் 16 நாடுகள் இடையே வரியில்லாமல் வியாபாரத்தை தொடங்க முடியும், உலகின் மிகப் பெரிய தடையில்லாத வணிக சந்தையாக இந்த பகுதி மாறும் என்ற காரணத்திற்காக, கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் இந்த பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு.

ஆனால், இதனால் தொடர்ந்து பாதிக்கப்பைச் சந்தித்து வருவது என்னவோ இந்தியா தான். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவின் பொருட்கள் இங்கு குவிக்கப்படும். இது இந்தியாவின் வர்த்தகர்கள், சிறு தொழிலதிபர்கள் மட்டுமல்லாது விவசாயிகளையும் பாதிக்கும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளால், இங்குள்ள பால் உற்பத்தியாளர்களும், அது தொடர்பான துறைகளும், கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதையெல்லாம் தவிர்க்கத்தான் இந்தியா இந்த ஒப்பந்தத்தை தற்போது புறக்கணித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிடிவாதத்தினால் தான் இந்த நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது என்று பலரும் மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் சுதந்திரம் பெற்ற தினம் தொட்டு ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியால் இத்தகைய சவாலான முடிவை எடுத்து இருக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். 

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2020ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். அவரின் கனவு நனைவாகப் போகிறது என்பதன் அடையாளம் தான் இந்தியாவின் இந்த முடிவு. இதனை ஓர் ஆண்மை கொண்ட அரசு தான் செய்ய முடியும். மத்திய அரசு அதனை செய்து காட்டி சாதனை படைத்து இருக்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP