காஷ்மீரில் தொடரும் வேட்டை - இன்றும் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் 6 தீவிரவாதிகளை இன்று சுட்டுக் கொன்றனர். அவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம், சண்டையில் காயமடைந்த ராணுவ வீரர் ஒருவரும் பலியானார்.
ஷோபியான் மாவட்டம், நதிகாம் கிராமத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அதே ஷோபியான் மாவட்டத்தின் படாகுந்த் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு நேற்றிரவு தேடுதல் வேட்டை தொடங்கியது.
ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சிறப்புப் பிரிவு உள்ளிட்டோர் இந்தத் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இன்று அதிகாலையில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்தபோது, அவர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பிலும் மோதல் மூண்டது. இறுதியில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் இறங்கினர். பாதுகாப்பு படையினருக்கு எதிராக அவர்கள் வன்முறையில் இறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம், வதந்தி காரணமாக பிற இடங்களில் வன்முறை பரவுவதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷோபியான் மாவட்டத்தில் செல்போன் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆக மொத்தம், கடந்த வாரத்தில் 15க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வேட்டையாடியுள்ளனர்.
newstm.in
newstm.in