மத்திய கிடங்கில் நிரம்பி வழியும் தானியங்கள்: உதவி தேவைப்படும் நாடுகளுக்கு உதவிடுமாறு அதிகாரிகள் ஆலோசனை!!
இந்தியாவின் மத்திய கிடங்கில், தானியங்கள், தேவைக்கு அதிகமாக நிரம்பி வழிவதால், அவற்றை உதவி தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு, இந்திய உணவுக் கழகத்தின் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவசர நேரங்களில் உபயோகித்துக் கொள்வதற்காக, இந்திய உணவுக் கழகம், இந்திய மக்களின் தேவைகள் போக மீதியிருக்கும் தானியங்களை, மத்திய சேமிப்பு கிடங்கில் சேமித்து வைப்பது வழக்கம். சமீபகாலமாக, சேமிப்பு கிடங்கில் அரிசி மற்றும் கோதுமை அளவுக்கு மீறி நிரம்பி வழிவதால், அவற்றை தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வழிமுறையை மேற்கொள்ளுமாறு உணவு நிறுவன அதிகாரிகள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே இருமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை எனவும் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சேமிப்புகள் பெருகிக்கொண்டே போவதால், புதிதாக அருவடை செய்யப்படும் தானியங்களை சேமித்து வைக்க இடப்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2011-12, 2013-14, 2017-18 ஆகிய ஆண்டுகளில், தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா தானிய ஏற்றுமதிகள் மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போதைய அளவை விட தற்போது நிறைய தானியங்கள் சேமிப்பில் இருப்பதாகவும், அவைகளை தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான் சிறந்த வழியாக இருக்கும் எனவும் உணவுக் கழக அதிகாரிகள் கூறிகின்றனர்.
மத்திய கிடங்குகளில் சேமிப்பில் வைக்கப்படும் தானியங்களை ஏற்றுமதி செய்வதில், உலக வர்த்தக அமைப்பு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், இந்த தானியங்களை வர்த்தக ரீதியாக ஏற்றுமதி செய்வது சுலபமல்ல. எனவே தான், தேவைப்படும் நாடுகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசனை வழங்குவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
Newstm.in
newstm.in