ஆதார் குறித்து தவறான செய்தி - மன்னிப்பு கோரியது ஜெமால்டோ நிறுவனம்
ஆதார் விவரங்கள் திருடு போயிருப்பதாக தவறான செய்தி வெளியிட்டதற்காக மிகவும் வருந்துவதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் ஜெமால்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆதார் தகவல் களவு போனதாக எதையும் உறுதி செய்ய இயலவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
டிஜிட்டல் உலகில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மாபெரும் நிறுவனம் ஜெமால்டோ ஆகும். அந்நிறுவனம் கடந்த 15ம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உலகம் முழுவதிலுமான தகவல் திருட்டு குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், ஆதார் அட்டையில் உள்ள பெயர்கள், முகவரிகள் மற்றும் இதர விவரங்கள் தொடர்பாக 100 கோடி தகவல்கள் கசிந்துள்ளதாக ஜெமால்டோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆதார் தகவல் கசிவு குறித்து தவறான செய்தியை வெளியிட்டுவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும், ஜெமால்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி பிலிப்பி வாலே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆதார் குறித்து செய்தியை வெளியிடும் முன்பாக அதுகுறித்த உண்மைத்தன்மையை உறுதி செய்ய தவறியதற்காக மிகவும் வருந்துகிறோம். ஜெமால்டோ வெளியிட்ட செய்தியின் மூலம் ஏராளமான மக்களின் மனதில் ஆதார் குறித்து தவறான சிந்தனையை உருவாக்கியதற்காக மன்னிப்பு கோருகிறோம். ஆதார் திட்டத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. இதுகுறித்து, ஜெமால்டோ நிறுவனத்தில் உள்விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் அவர்.
newstm.in
newstm.in