அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா விவகாரங்களை முன்னிறுத்தி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், அஹமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹாசாரேவின் சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்தியில் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளாகியும், அந்த அமைப்புக்கான உறுப்பினர்கள் இதுவரை அமைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று மகாராஷ்டிர மாநில அரசு லோக் ஆயுக்த சட்டத்தை நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஊழல் செய்தால் அதை விசாரிப்பதற்கு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் வழிவகை செய்கிறது. மத்தியில் லோக்பால் அமைப்பை உறுவாக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், லோக்பால் உறுப்பினர்கள் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை.
முன்னதாக, காங்கிரஸ் ஆட்சியின்போது ஊழலுக்கு எதிரான மாபெரும் போராட்டத்தை அண்ணா ஹசாரே டெல்லியில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in