என்ன இது... கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு வந்துள்ள சோதனை!
கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதால், தங்களது கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நான்கு பேரவை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, காங்கிரஸ் குழுத் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.
கர்நாடக மாநில அரசில் தங்களுக்கு பதவி அளிக்கப்படாததால், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். இதனால், கடந்த மாதம் அங்கு மதசார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி அரசு நீடிக்குமா? என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களான ரமேஷ் ஜார்கிஹோளி, உமேஷ்ஜாதவ், நாகேந்திரா, மகேஷ்குமட்டஹள்ளி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, அவர்களது எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என, காங்கிரஸ் குழுத் தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா, கர்நாடக சபாநாயகரான ரமேஷ் குமாரிடம் மனு அளித்துள்ளார்.
கட்சி கொறடா உத்தரவிட்டும், அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நான்கு பேரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தங்கள் கட்சி எம்எல்ஏ.க்களையே தகுதிநீக்கம் செய்யக் கோரி, சபாநாயகரிடம் மனு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது, கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு சோதனைக் காலம்தான் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
newstm.in
newstm.in