அப்பாடா... ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு டாக்டர்கள் ஸ்டிரைக் !
மருத்துவர்களை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியளித்ததையடுத்து, அங்கு கடந்த ஏழு நாட்களாக நீடித்து வந்த அரசு மருத்துவர்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.
நோயாளி ஒருவர் இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், கொல்கத்தா என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 9) தாக்கினர்.
மருத்துவரை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அம்மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள், கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் இன்று, நாடு தழுவிய அளவில் அரசு மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, மருத்துவ பிரதிநிதிகள் 24 பேர்களுடன், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, மருத்துவர்கள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அரசு மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்தார். இதையடுத்து, அரசு மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர்.
பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை 12 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று, மேற்கு வங்க மாநில அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in