வந்தே மாதரம் பாடக்கூடாது: ம.பி. முதல்வர் உத்தரவு
மத்தியப் பிரதேச மாநில தலைமைச் செயலகத்தி்ல் மாதத்தின் முதல்நாள் இனி "வந்தே மாதரம்" பாடக்கூடாது என அம்மாநில முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முன்பு பாஜக ஆட்சியின்போது, தலைமைச் செயலகத்தில் வாரந்திர அமைச்சரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன் வந்தே மாதரம் பாடப்பட்டு வந்தது. தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் ஒவ்வொரு மாதத்தின் முதல்நாள் இப்பாடலை பாடுவதும் வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் அங்கு அண்மையில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு, இந்த நடைமுறைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், "வந்தே மாதரம் பாடிதான் ஒருவர் தமது தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டுமா? இதனை பாடதவர்களுக்கு தேசப்பற்று இல்லையென அர்த்தமா?" என்று முதல்வர் கமல்நாத் கேள்வியெழுப்பியுள்ளார்.
"அனைவருக்கும் தேசப்பற்றை ஊட்டும் நோக்கத்துடன் பின்பற்றப்பட்டு வந்த மரபை மாற்றுவது சரியல்ல. இந்தத் தடையை காங்கிரஸ் அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் வரும் 6-ஆம் தேதி தலைமைச் செயலக வளாகத்தில் நாங்கள் வந்தே மாதரம் பாடுவோம்" என மாநில முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in