உ.பி. : தேர்தலில் காங்கிரஸுக்கு பீம் ஆர்மி அமைப்பு ஆதரவு !
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 8 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒன்றான சஹரான்பூரில் தலித் சமூக அமைப்பான பீம் ஆர்மி, காங்கிரஸுக்கு ஆதரவளித்துள்ளது.
இதுகுறித்து பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர ஆசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலித் சமூகத்தினர் அனைவரும் சஹரான்பூரில் காங்கிரஸ் வேட்பாளரான இம்ரான் மசூதிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆசாத்தின் இந்த அறிக்கை, மாயாவதி, அகிலேஷ் யாதவ் அமைத்துள்ள மெகா கூட்டணியை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. தலித் வாக்குகளை பிரித்து பாஜகவின் ஏஜெண்டாக, ஆசாத் செயல்படுவதாக மாயாவதி ஏற்தெனவே குற்றம் சுமத்தி இருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதிக்கு அடுத்தபடியாக புதிய தலைவராக ஆசாத் உருவெடுத்து வருகிறார். எனவே, அவரை தன் பக்கம் வளைத்து தலித் வாக்குகளை பெற பிரியங்கா முயன்றார். கடந்த மாதம், ஆசாத் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த போது அவரை பிரியங்கா சந்தித்திருந்தார்.
முஸ்லிம்களால் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் தொகுதியாக இருப்பது சஹரான்பூர். இங்கு சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகளின் சார்பிலும் பைஜுல் ரஹ்மான் என்ற முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் வேட்பாளாராக போட்டியிடுகிறார்.
இதனால், முஸ்லிம் வாக்குகள் பிரிந்து பாஜகவின் வேட்பாளர் வெல்லும் சூழல் உருவாகி உள்ளது. இங்கு இம்ரான் மசூதிற்கு ஆதரவாக, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா நேற்று பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in