ஒருநாள் போலீஸ் ஆன மாணவி : கொல்கத்தாவில் ருசிகர சம்பவம்!
ஐஎஸ்சி (Indian School Certificate) பாடத் திட்டத்தின்கீழ் பயின்று, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ - மாணவியர்களுக்கான தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை வெளியானது.
இதில், மேற்கு வங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த ரிச்சா சிங் என்ற மாணவி 99.25 சதவீத மதிப்பெண்களுடன் தேசிய அளவில் நான்கு இடத்தை பிடித்துள்ளார். அவரது இந்த சாதனையை பாராட்டும் வகையில், அவரை கொல்கத்தா நகரின் "ஒருநாள் போலீஸ்" ஆக அமர வைத்து அழகு பார்த்துள்ளது அந்த மாநகர நிர்வாகம். ஆம்... ரிச்சா சிங் தான் நேற்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, கொல்கத்தா மாநகரின் தென்கிழக்கு மண்டலத்தின் துணை காவல் ஆணையர் (டிசிபி).
இவரது தந்தை ராஜேஷ் சிங், கரியாஹட் காவல் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரியும் நிலையில், "டிசிபியான நீங்கள் உங்கள் தந்தைக்கு எதாவது உத்தரவிட விரும்புகிறீர்களா?" என போலீஸார் கேட்டுள்ளனர்.
அதற்கு, "ஆமாம்... தினமும் பணிமுடிந்து சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என அவருக்கு உத்தரவிடுகிறேன்" என புன்சிரிப்புடன் கூறியுள்ளார் ரிச்சா சிங்.
அதற்கு, "எனது உயரதிகாரியான உங்களின் உத்தரவுபடி நடக்கிறேன் மேடம்" என ரிச்சாவின் தந்தை ராஜேஷ் சிங் ஆனந்த கண்ணீருடன் பதிலளித்தார். உணர்வுபூர்வமான இந்நிகழ்வு, அங்கிருந்த காவலர்கள் உள்ளிட்டோரை நெகிழ்ச்சியடைய செய்தது.
newstm.in
newstm.in