பற்றி எரியும் போராட்டம்! பலி எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு..
குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் உயிரிழப்பு 11ஆக அதிகரித்துள்ளது.
குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் பற்றி எரிந்து வருகின்றன. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நாளுக்குநாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக்குண்டு வீசியும் கூட்டத்தை கலையச் செய்தனர். இதில், 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் பலத்த காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. உயிரிழந்தவர்களில் இருவர் பிஜ்னோர் மாவட்டத்தையும் இதர மூன்று பேர் பிரோசாபாத், சம்பல் மற்றும் மீரட் மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என போலீஸ் டி.ஜி.பி ஓ.பி. சிங்கும் இந்த தகவலை உறுதிபடுத்தினார். இந்நிலையில் காயமடைந்தவர்களில் மேலும் 6 பேர் உயிரிழந்தததால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் உத்திர பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in