அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் வழக்குரைஞர் கைது!
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்குரைஞர் கெளதம் கைத்தானை, அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவர் டெல்லி பாட்டியலா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அரசில் உயர் பொறுப்பு வகிக்கும் முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக ஹெலிகாப்டர்களை வாங்க, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு, இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி, மத்திய பாஜக அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
அத்துடன், இம்முறைகேடு குறித்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன. இவ்வழக்கில் பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், டெல்லியில் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்குரைஞர் கௌதம் கைத்தான் இன்று கைது செய்யப்பட்டார். கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரை, அமலாக்கத் துறையினர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
newstm.in
newstm.in