கர்நாடகாவில் ஓலா கால் டாக்சி நிறுவனத்திற்கு அனுமதி
கர்நாடகாவில் ஓலா கால் டாக்சி நிறுவனத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதியில்லாமல் பைக் டாக்சிகளை இயக்கியதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று ஓலா கார் நிறுவனத்திற்கு 6 மாதம் தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதை தொடர்ந்து ஓலா கால் டாக்சி நிறுவனம் தங்களது வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஓலா நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அரசின் இந்த உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஓலா ஓட்டுநர்கள் தெரிவித்திருந்தனர். இதை கருத்தில் கொண்டு ஓலா நிறுவனம் இன்று முதல் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அரசின் சமூகநலத்துறை அமைச்சர் பிரியங் கார்கே, ஓலா ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் அந்நிறுவனம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதியில்லாமல் ஓலா நிறுவனம் பைக் டாக்சிகளை இயக்கி வந்தது. பாதுகாப்பு காரணங்களால் பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையும் மீறி அந்நிறுவனம் பைக் டாக்சிகளை இயக்கியதால் தடை பிறப்பிக்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளார்.
newstm.in
newstm.in