கேரள முதல்வருக்கு கன்னியாஸ்திரிகள் கண்ணீர் கடிதம்!
கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பிஷப் பிரான்கோ முலக்கல் தரப்பிலிருந்து தங்களுக்கு மிரட்டல் வருவதாக, சக கன்னியாஸ்திரிகள் நால்வர், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கண்ணீர் கடிதம் எழுதியுள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில், பிஷப் பிரான்கோ முலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக உள்ள நான்கு கன்னியாஸ்திரிகளை திருச்சபை நிர்வாகம் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த நால்வரும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு உரிய நீதி கிடைக்கும் வரை அவருடனே இருப்போம் என உறுதிப்பட தெரிவித்தனர்.
இந்த நிலையில், கன்னியாஸ்திரிகள் நால்வரும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், "தமக்குள்ள பணம் பலம் மற்றும் அரசியல் பலத்தை வைத்து, தன் மீதான வழக்கை நீர்த்து போக செய்வதற்கான அனைத்து முயற்சிகளை பிஷப் பிராங்கோ மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் அவர் தரப்பிலிருந்து எங்களுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. சில நாள்களாகவே நாங்கள் பாதுகாப்பாகவே இல்லை. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக இருப்பது எங்களது கடமையென கருதுகிறோம். எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் (முதல்வர்) உடனடியாக தலையிட வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
newstm.in
newstm.in