கமலேஷ் திவாரி கொலை வழக்கு - வேண்டுமென்றே அடையாளங்களை விட்டு சென்றுள்ளனரா கொலையாளிகள்??
உ.பி மாநிலம் லக்னோ நகரில், இந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மூவரை கைது செய்திருந்த போலீசார், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரை தற்போது கைது செய்திருக்கும் நிலையில், வேண்டுமென்றே தங்களது அடையாளங்களை கொலையாளிகள் விட்டு சென்றிருப்பார்களோ என்கிற சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளது.
இந்த சந்தேகங்களுக்கு வித்திட்ட காரணிகளாக, சில நிகழ்வுகளை முன் வைத்துள்ளனர் போலீசார்.
கமலேஷ் திவாரியை கொலை செய்த தினத்தன்று, முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ஜாகிர் உசேன் ஷேக் மற்றும் மொய்னுதீன் குர்ஷித் பதான் இருவரும், குஜராத் மாநில சூரத் நகரின் ஓர் கடையில் இனிப்புகள் வாங்கியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் குஜராத்தில் தான் உள்ளனர் என்பதை அடையாளப்படுத்த முயற்சித்துள்ளார்களோ என்று சந்தேகிக்கின்றனர் போலீசார்.
திவாரியை கொலை செய்வதற்கு முன்பு, தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, அவரின் மனைவியை இருவரும் சந்தித்துள்ளனர். போலீசாரிடம் பிடிபட கூடாது என்ற எண்ணம் இருக்கும் ஒருவர், நிச்சயமாக அவரது குடும்பத்தினரை சந்தித்திருக்க மாட்டார்கள்.
தங்களது தேவைக்காக சிம்கார்டு வாங்கிய இருவரும், தங்களது நிஜமான ஆதாரத்தை சமர்ப்பித்தே கார்டை பெற்றுள்ளனர். கடையில் உள்ள சிசிடிவியில் அவர்களது முகங்கள் பதிய வாய்ப்புண்டு என்ற நிலையிலும் இருவரும் போலியான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. திவாரியின் வீட்டின் அருகில் இருக்கும் சிசிடிவியிலும் இவர்கள் இருவரது முகங்களும் பதிவாகியுள்ளன.
லக்னோ நகரில் தங்கியிருந்த ஹோட்டலின் சிசிடிவியிலும் அவர்களது முகங்கள் பதிவாகியுள்ளன. அங்கும் அவர்களது உண்மையான பெயர் மற்றும் ஆதாரங்களை தான் அவர்கள் உபயோகித்துள்ளனர்.
திவாரியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் இதர பொருட்களையும் ஹோட்டல் அறையிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.
வெகு நாட்களாக கமலேஷ் திவாரியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாகவும், கடந்த 2015 ஆம் ஆண்டு, திவாரியின் நபிகள் நாயகம் குறித்த கருத்திற்காக தான் அவரை கொன்றதாகவும் அவர்கள் போலீஸ் விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.
பல நாட்களாக திட்டம் தீட்டி கொலை செய்யும் கொலையாளிகள் அவ்வளவு எளிதாக தங்களது அடையாளங்களை விட்டுச் செல்ல மாட்டார்கள் என்பதால், திவாரியின் கொலை மூலம் அவர்கள் ஏதோ கூற முயல்கிறார்களோ என்ற சந்தேகம் தற்போது போலீசாருக்கு எழுந்துள்ளது.
Newstm.in
newstm.in