காலணியில் வைத்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தல் !
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தினை காலணியில் வைத்து கடத்தியவரை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினரும், காவல் துறையினரும் நாட்டின் அனைத்து இடங்களிலும், சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில, இன்று காலை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒரு பயணியின் உடமைகளை சோதனையிட்டனர். சோதனையில் அந்த பயணி 2 தங்க கட்டிகளை, அணிந்திருந்த காலணிகளில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. பிடிபட்ட தங்க கட்டிகள் 381 கிராம் எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.11,12,139 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கம் கடத்தி வந்த பயணியை கைது செய்து, சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in