கஃபே காபி டே நிறுவனர் மாயம்: தேடும் பணி தீவிரம்!
திடீரென மாயமான கஃபே காபி டே நிறுவனரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி. சித்தார்த்தாவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனும் ஆவார். நேற்று மாலை காரில் மங்களூருக்கு சென்றுக்கொண்டிருந்த சித்தார்த்தா, உல்லாவில் உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் வாகனத்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
பின்னர் காரில் இருந்து இறங்கி பாலத்தில் அங்கும், இங்குமாக நடந்து கொண்டே செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், வெகுநேரமாகியும் சித்தார்த்தா கண்ணில் தென்படாததால் ஓட்டுநரை அவரை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனால் சித்தார்த்தா கிடைக்காததால் பதற்றம் அடைந்த கார் ஓட்டுநர் இது குறித்து அவரது வீட்டிற்கு தெரியப்படுத்தினார்.
குடும்பத்தினர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து, காவல்துறையினர் உதவியுடன் அவரை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை சித்தார்த்தா கிடைக்கவில்லை. இந்நிலையில், அவர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், " கடும் முயற்சிகளை மேற்கொண்டும் எனது தொழிலை லாபகரமாக்க முடியவில்லை. ஒரு தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன். என் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நான் விற்ற பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு எனது பங்குகளை வாங்கிய ஒருவர் என்னை மிகவும் நெருக்குகிறார். நீண்ட காலம் போராடி விட்டேன். இனிமேலும் என்னால் போராட முடியவில்லை என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார் அவர் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல் படையினரின் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் அவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
newstm.in
newstm.in