வெங்காயத்தால் ஒரே நாளில் கோடீஸ்வரரான விவசாயி! மொத்த கடனையும் அடைத்த அற்புதம்!
மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டு வெங்காயம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் விலை சரிவு ஏற்பட்டது. இதனால், விவசாயிகளால் விற்பனை செய்யமுடியாமல் அனைத்தையும் சாலையில் கொட்டு சென்றனர். இதனால் பல விவசாயிகள் கண்ணீர் சிந்தினர். இதனால் கடந்த சாகுபடியின் போது, பல விவசாயிகள் வெங்காயம் பயிரிடவில்லை. பருவமழை காரணமாக ஒருசிலர் பயிரிட்ட வெங்காயமும் அழிந்துபோனது. இதனால் வெங்காய விலை விண்ணை தொட்டது.
வெங்காயத்தின் விலை உயர்வால், கர்நாடகாவைச் சேர்ந்த கடனில் மூழ்கிய வெங்காய விவசாயி, ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆக மாறியுள்ளார். கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தோதசித்தவ்வனஹள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி மல்லிகார்ஜூனா (42). இவருக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் தென்மேற்கு பருவ மழை சமயத்தில் வெங்காயம் பயிரிட்டு இருந்தார். அவர் அதற்காக 15லட்சத்தை வங்கியில் கடனாக வாங்கி முதலீடு செய்திருந்தார். தனக்கு 5 முதல் 10 லட்சம் லாபம் கிடைக்கும் என்று நம்பி தனது வெங்காயத்தை பாதுகாப்பாக வளர்த்து வந்தார். ஆனால் மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் வெங்காய பயிர்கள் அழிந்து போக இவரது பயிர்கள் மட்டும் அழியவில்லை.
காரணம், தோதசித்தவ்வனஹள்ளி பகுதி நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ள பகுதியாகும். நிலத்தடி நீரும் வற்றிப்போய்விட்டதால் பலரும் விவசாயத்தை கைவிட்டு விட்டனர். ஆனால் மல்லிகார்ஜூனா மட்டும் 2004ம் ஆண்டு முதல் மழைக்காலத்தில் வெங்காயத்தை பயிரிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் மூலம் ஐந்து லட்சம் தான் வருமானம் வருமாம். அதேபோல் இந்த ஆண்டும் ரூ. 5லட்சம் லாபம் வரும் என்று நம்பிக்கொண்டிருந்த மல்லிகர்ஜூனாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
வெங்காய விலை 30 ரூபாய்,40 ரூபாய் என்று இல்லாமல் 200 ரூபாய்க்கு உயர்ந்ததால் நவம்பர் மாதம் முடிவதற்கு உள்ளாகவே மல்லிகார்ஜூனா கோடீஸ்வரன் ஆகிவிட்டார். பயிர் கடன் வாங்கி பயிரிட்டு நஷ்டங்களை சந்தித்து வாராக்கடனில் மூழ்கி கிடந்த மல்லிகர்ஜூனா இந்தமுறை எடுத்த மிகப்பெரிய முயற்சி அவருக்கு எதிர்பார்க்காத அளவு பலன் கொடுத்துள்ளது. அவருக்கு 240 டன் வெங்காயம் கிடைத்துள்ளது. இதனை விற்றால் லட்சங்களில் லாபம் கிடைக்கும் என எண்ணிய நிலையில், லாபம் கோடிகளாக மாறியுள்ளது.
இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் விவசாயி மல்லிகர்ஜூனா இருக்கிறார். அதோடு, மல்லிகார்ஜூனாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெங்காயத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்க காவலர்களை நியமித்துள்ளனர்.
Newstm.in
newstm.in