பணத்துடன் கடத்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம்... காவல்துறை அதிர்ச்சி !
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ரூ.30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றுள்ள சம்பவம் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே போசரி போராடே வஸ்தி என்ற இடத்தில் பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். அவர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றபோது, அங்கு ஏ.டி.எம். எந்திரம் பெயர்க்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டார். இதையடுத்து அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
காவல்துறையினரும், வங்கி அதிகாரிகளும் உடனடியாக வந்து பார்த்ததில், பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளைபோனது தெரியவந்துள்ளது. நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் சிசிடிவி கேமரா வயர்களை அறுத்துவிட்டு, கியாஸ் கட்டர் மூலம் வெட்டி ஏ.டி.எம். இயந்திரத்தை தூக்கி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கொள்ளைபோன ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.30 லட்சம் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டு இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in